வியாழன், 9 ஜூன், 2011

நூல்: மலைச் சுவடுகள். ஆசிரியர்:மாரிமுத்து சிவக்குமார்.நூல் ஆய்வு:கலைமகள் ஹிதாயா றிஸ்வி.

இலங்கையின் இன்றைய தமிழ் இலக்கியப் பரப்பினை நாம் அவதானிக்கும் போது கலை இலக்கியப் படைப்பாளர்களின் பெருக்கம் (தொகையளவில்) மிக...மிக... குறைந்து கொண்டே செல்வதை அவதானிக்கலாம்.

அதே நேரம் கடந்த 70 தொடக்கம் 85 வரையிலான காலகட்டத்தில் படைப்பாளிகளின் தொகை அதிகளவு அதிகரித்துச் சென்றமையை நாம் மறந்து விட முடியாது.
அன்று இருந்த கலை இலக்கிய துடிப்புக்கும், இன்றுள்ள கலை இலக்கிய துடிப்புக்கும் எவ்வளவோ வித்தியாசம். அன்று இலக்கியமே இலட்சியமாய்,இலட்சியமே இலக்கியமாய் இருந்தது.

பல பத்திரிகைகள் போட்டிபோட்டுக்கொண்டு இளம் படைப்பாளர்களது வளர்ச்சிக்கு களம் அமைத்துக் கொடுத்தன. இலங்கையின் பல இடங்களில் இருந்தும் சஞ்சிகைகளின் வரவு அதிகரித்துக் கொண்டே இருந்தன.
ஆனால் இன்று எவ்வளவோ வித்தியாசமாக மாறிப் போயுள்ளதை உணர்கின்றோம்.வாசிப்புத்தன்மை எம் மத்தியில் குறைந்து கொண்டே செல்கின்றது.சின்னத்திரைகளில் ,படங்களையும்,நாடகங்களையும் இன்று பார்ப்பதில் காலமும் நேரமும் செல்கின்றது.
அன்றைய தரமான கவிஞர்களும் ,சஞ்சிகைகளும் இன்று எங்கே?
இன்று வளரத்துடிக்கும் கலையுள்ளங்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் ஊடகங்களும் ,கலை இலக்கிய பிரசுரங்களும் மிகமிகக் குறைவாகவே காணப்படுகின்றன.வளரத் தகுதியானவர்கள் கூட வித்திலே சிலரால் தோண்டப்படுகின்றனர்.நாமங்களைக் கொண்டு தரமானப் படைப்புக்கள் கூட சில தீய சக்திக ளினால் புதைக்கப்படுகின்றன.இதனால் புதிய தலைமுறையினருக்கு களம் அழிக்கப்படுகின்றது.
இந்திய கலைஞர்களான வைரமுத்து ,மு.மேத்தா,அப்துல் ரஹ்மான் போன்றோர்களது நூல்களுக்கு கொடுக்கும் வரவேற்பு ஏன் இலங்கை கவிஞர்களது எம் தேசத்தில் கிடைப்பதில்லை ஏன் அவர்களுக்கு நேசக் கரம் நீட்டுவதில்லை!
இலக்கியத் தாகம் எம் மண்ணில் வற்றிவிடக் கூடாது! அழிந்து வரும் மொழிகளில் எம் தமிழ் மொழி தொலைந்து விடக் கூடாது.இதை எம் மண்ணில் வாழும் கலை உள்ளங்கள் உணர வேண்டும்.சில தரமான கலை உள்ளங்களை இன்றைய சூழ்நிலைகளில் "சிந்தனை வட்டம் " இனம் கண்டு அவர்களது படைப்புக்களை முடிந்தளவு நூல்களாக வெளியிட்டு வருவதையிட்டு நாம் சந்தோசப்படுவதுடன் உதவிக் கரங்களையும் நீட்ட வேண்டும்.இந்த வகையில் இலங்கையில் கூடியளவு நூல்களை வெளியிட்டு வரும் "சிந்தனை வட்டம்"மலையக மண்ணில் பிறந்த மாரிமுத்து சிவக்குமாரின் மலையகச் சுவடுகள் எனும் கவி நூல் சிந்தனை வட்டத்தின் 204 வது வெளியீடாக மாரிமுத்து சிவக்குமாரின் முதலாவது கவிதைத் தொகுதி வெளி வந்துள்ளது.ஆம் மலையக கலை இலக்கிய படைபாளர்களின் வரிசையில் அமரர்கள் ,க. ப.லிங்கதாசன் ,குறிஞ்சி தென்னவன்,மற்றும் ஹலிம்தீன் ,பண்ணாமத்து கவிராயர் போன்ற பல கவிஞர்கள் தரமான கவிதைகள் மூலம் குரல் கொடுத்துள்ளார்கள்.அவர்களது வரிசையில் ஓர் வாரிசாக சிவக்குமாரை சேர்க்கலாம்.ஆம் மாரிமுத்து சிவக்குமாரின் கவிதைகளில் சமூக நோக்கும்,இன,மொழி,மத,பேத மற்ற மானிட நேயமும் வெவ்வேறு வகைகளில் கவிதைகள் முழுவதும் இழையோடி நிற்பதை அவதானிக்கலாம்.
அவ்வப்போது தினசரிகளிலும் ,சஞ்சிகைகளிலும் ,மலர்களிலும் வெளிவந்த கவிதைகள் பல இத்தொகுதியில் அடக்கப்பட்டுள்ளன.எமது நாட்டிலும் ,அப்பாலும் தான் பிறந்த மண்ணிலும் இடம் பெற்று வந்துள்ள நிகழ்வுகளின் ஒரு வெட்டுமுகத் தோற்றமாக இந்நூலிலுள்ள கவிதைகள் விளங்குகின்றன.சிவக்குமாரின் கவிதைகளில் முதிர்ச்சித்தன்மையினைக் காண முடிகின்றது.சமூக அவலங்களையும் ,மூடநம்பிக்கைகளையும் ஒரு தேர்ச்சி பெற்ற திரைப்பட இயக்குனரைப் போல கவிதைவடிவில் படம் பிடித்துக் காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளார்.கவிஞர் தாம் வாழும்,தாம் காணும், தாம் அனுபவிக்கும் மலையகத்தை அப்படியே வாசகர் முன் நிறுத்துவதற்குத் தமது கவிதைகள் மூலம் முயற்சிக்கிறார்.மலையகத்தின் சோக வாழ்வியலைத் தமது கவிதைகள் தோறும் படம் பிடிக்க முனைந்துள்ளார்.மலையகம் எதிர் காலத்தில் புதுமைகளை ,மாற்றங்களைக் காண வேண்டும்.என்ற தமது தணியாத தாகத்தையும் கவிதைகள் மூலம் வெளிப்படுத்துகின்றார்.மலையகத்தைப் பாதிக்கும் விடயங்களை விட்டொழிக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார். மலையகம் தொடர்பான பல கவிதைகள் இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் ஆத்மாவையே அழித்தொழிக்கும் முறையில் நீண்ட காலம் நிலை பெற்று வந்த போர்,எண்ணிறைந்த உடல் அழிவுகளையும்,உடமை அழிவுகளையும்,உள அழிவுகளையும், ஏற்படுத்தியது.இப்போது போர் ஓய்ந்துள்ள போதிலும் போர் அபாயம் இன்னும் நீங்கிட வில்லை.என்றைக்கும் 'போர் வேண்டாம்' என்று தான் மனிதாபிமான இதயங்கள் அனைத்தும் கருதுகின்றன.கவிஞனின் வகையில் கவிஞர் சிவகுமாரும் யுத்தத்தைப் புறக்கணிப்பதில் ஆச்சிரியப்படுவதற்கில்லை.' யுத்தத்தைப் புதைப்போம் ' என்ற கவிதையில் தனது மனிதாபிமான உணர்வை அவர் புலப்படுத்துகிறார். கவிஞர் மலையகத்தில் பிறந்தவர் என்பதால் இக் கவிதைத் தொகுதியில் கணிசமானவை மலையகத் தொழிலாளர்கள் , மலையகத்து அவலங்கள் பற்றியவையே! மானுட நேயம் மிக்க எந்த ஒரு கவிஞனையும் ,தம்மால் ஈர்க்கத்தக்க அளவிற்குத் துன்பக் கேணிகளாகவும் ,அவலங்கள்,சோகங்கள்,சோதனைகள்,வேதனைகள் முதலியவற்றின் மொத்த உருவங்களாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மலையகத் தொழிலாளர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மாரிமுத்து சிவகுமார் தன் கவிதைகளை உருக்கமாக மனம் திறந்து தந்துள்ளார்.
லயத்துச் சிறைகள் கவிதையில்,
சிறைகளில் வாழும்
கைதிகளைப் போல்,
எங்கள் வாழ்க்கையின்
உரிமைகளை எல்லாம் -இந்த
லயச்சிறைக்குள்ளேயே வைத்து
கவ்வாத்து வெட்டுகின்றனர் !
மனத்துயரம் கவிதையில் தெரிகின்றது மனம் வெதும்பிப் பாடியுள்ளத்தையும் நாம் மனங்கொள்ளல் வேண்டும்.உதாரணத்திற்குச் சிலவற்றை காணலாம்.
மலைச்சுவடுகளும் கவிதையில்
உழைப்பின் ஏணிகள்தான்
எங்களது
கருவறைகள்
அந்த ஏணியே
ஊனமாகும் போது
எங்கள் உருவங்கள்.
எப்படி முழுமை பெறும்....?

இல்லாத உரிமையெல்லாம் எந்நாளில் மீண்டிடுமோ....?
எனும் இன்னொரு கவிதையில்,
வாழ்வதுவோ
ஒரு கூடை கொழுந்துக்குள்ளே
சாய்வதற்கோ இடமில்லை.
லயத்துக்குள்ளே....
வீழும்வரை விதியின்பாதையிலே
நடந்து செல்ல
மிரட்டி மிரட்டி
ஓரங்கட்டபலபேர்.

இப்படி மாரிமுத்து சிவகுமாரின் பல கவிதைகள் துயரத்தை தருகின்றன.
முடிவாக;
ஆழமான ,சமூக பார்வை மிக்க,முழு மனிதயினத்தை யோசிக்கத் தூண்டும் கருத்துக்களை இவரது அனுபவம் நிச்சயமாக பலருக்கும் கற்றுக் கொடுக்கும் நல்ல பல தரமான கவிதைகளை இவரிடமிருந்து நான் மேலும் எதிர்பார்க்கிறேன். "மலைச் சுவடுகள்" என்ற இக்கவிதைத் தொகுதி மாரிமுத்து சிவகுமாரின் ஆரோக்கிய வளர்ச்சியினைக் காட்டுமென்று நம்புகின்றேன். கவித்துவ வீறும். கருத்து வீச்சும் ஆழ்ந்த சமூகப் பார்வையும் கொண்ட கவிதைகள் பலவற்றை மேலும் தந்து ஈழத்துத் தமிழ்க் கலையுலகிற்கு வளம் சேர்ப்பார் என நம்புகிறேன்.

நூல்: மூடு திரை (சிறு கதை தொகுதி) ஆசிரியர்: மஸீதா புன்னியாமீன் நூல்ஆய்வு : கலைமகள்ஹிதாயாறிஸ்வி

வானைத் தொட்டு விட வேண்வாக் கொண்டுவளர்ந்த மலைகள், அதில் தங்கி களைப பாற்றிக் கொள்ளும் வெண் பஞ்சு முகில்கள்,பொன் வண்ண மழை மங்கையின் மேனியெங்கும் போர்த்தியிருக்கும்,தேயிலைப் பசும் பட்டாடைகள் தாயின் மார்பில் ஊறிச் சுரக்கும் ஜீவ அமுதம் போல் மழை மாதாவின் இதயத்தில் ஊறிச் சுரந்து ஓசையிட்டுப் பாடி வரும் குளிர் நீர் அருவிகள்.இயற்கையும்,செயற்கையும் இணைந்து கை கோர்த்து களி நடம் புரியும் கவின் மிகு காட்சிகள்.இந்த அழகு ஓவியம் நிறைந்த மலையகத்தை வசிப்பிடமாக கொண்டவர் மஸீதா புன்னியாமீன். காலி கட்டுக் கொடையை பிறப்பிடமாக கொண்டவர்.கணித விஞ்ஞான ஆசிரியையான இவர் 80 காலப் பகுதியில் கலையுலகில் பிரசித்தார்.இலங்கையிலுள்ள முஸ்லிம் எழுத்ததாளர்களை விரல் விட்டு எண்ணும்போது இவரும் ஒருவர்.அழகான பார்வையும்,அறிவுக் கூர்மையும்கொண்ட ஆளுமைமிக்க எழுத்தாளராய்,கவிஞராய் தன் ஆற்றலை அகலப்படுத்திக் கொண்ட இவரது கவிதைகளும் கதைகளும் காத்திரமான கருத்தாலமிக்கது.சமுதாயத்தின் சரிவுகளும் சஞ்சனங்களும் இவரது கதைகளில் நிறைந்து காணப்படும்.பெண்ணியத்தை கண்ணியமாய் மதிக்கத் தெரியாத காட்டு மிராண்டித் தனம்,காடைத்தனம்,சமுதாய அடக்கு முறை,ஒடுக்கு முறை ஆகியவற்றிற்குத் தீர்வு காணும் பாங்கில்,இவரது கதை போக்கு சரிவில்லாமல் வளர்ந்து செல்லும்."நாளைய சந்ததியின் இன்றைய சக்தி"என்ற இலச்சினையோடும்,இலட்சியத்தோடும் இடையுறது உழைத்து வரும் "சிந்தனை வட்டத்தின்"298 வது வெளியீடாக மஸீதா புன்னியாமீனின் "மூடு திரை"எனும் சிறுகதைத் தொகுதி.இந்த தொகுதியில் 09 சிறுகதைகள் மாத்திரமே இடம் பெறுகின்றன. அவற்றில்,"நிலவுக்கொரு மூடுதிரை"எண்ணும் தலைப்பிலான சிறுகதை,விதவை சமீராவின் விசும்பலை,விரக்தியை வெளிப்படுத்தி நிற்கின்றது.வாழாவெட்டியாய் வயிற்றுப்பாட்டுக்குவழி தேடியவாறு வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் வனிதையரின் வாழ்க்கைச் சவடால்கள் கதைக் கருவாய் சுட்டப்படுகின்றன.
".........அந்திப்பட்டா ஊட்டோட வாசலோட அடங்கியிருக்காம,எங்க போய் தொலஞ்சண்டு......கேட்டன்.கண்ட கண்ட கழுதயெல்லாம் ஒண்ட உம்மா எப்படி ஈக்கா என்று சாட கேக்கிறானுவள்.வாப்பா இல்லாமப் போனபொறவு நீங்க முந்தி மாதிரி இல்ல...இப்ப..."
மண்வாசனை சொற்களோடு கூடிய இக்கதை,விதவைகளுக்கு மறுமணம் அவசியம் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது."கறைகளும் கரைகளும்"என்னும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் மனதைத் தொடுகின்றன.தளர்ச்சி கண்டு தள்ளாடும் தந்தையைத் தணியாத தாட்சணியத்தொடு தாபரிக்கும் தனயன்,அவனது அன்புக்கு அடிமையாகி,அடக்கவொடுக்கமாய் மாமனாரை மதித்து மரியாதை செய்யும் மனைவி -மக்கள் என,படைக்கப்பட்ட கதா பாத்திரங்கள் ஒரு குடும்பத்தில் இருந்தால்,அதுவே பெரும் மன நிறைவைத் தரும்."நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்"என்பதற்கு இந்தக் கதை அழுத்தம் கொடுக்கின்றது.கதாசிரியை மஸிதா புன்னியாமீன்,சுனாமிப் பேரலைச் சூறையாடலையும் சொந்த வாழ்வில் கண்டு,சொந்த பந்தங்களை இழந்து சொகித்த்தவர்.அந்த அனுபவத்தின் அவதிப்பாட்டை அவர் "முகவரியில்லா முகம் "என்ற கதையில் வேதனை விசும்பலோடு வெளிப்படுத்தியுள்ளார்.காலி மாவட்டக் கட்டுக் கொடைக் கடற்கரை உறவினரைக் காவு கொண்ட உண்மைச் சம்பவத்தை அக்கதையில் நாம் காணலாம்."துருவங்கள்"என்னும் கதையில்,இரு வேறு கதாபாத்திரங்கள் கொள்கை ரீதியாக வேறுபட்டு நிற்கின்றன.அளவோடு குழந்தைகளைப் பெற்று,வளமோடு வாழ வேண்டுமென எண்ணும் தாய் ஒரு புறம்."இறைவன் தருகிறான்.நாங்கள் பெறுகிறோம்....."என்ற வீறாப்புடன் வாயாடி அளவுக்கதிகமாகக் குழந்தைகளைப் பெற்று,பேணி வளர்க்க தெரியாத தாய் ஒரு புறம்.இரு சாராரும் வெவ்வேறு துருவங்கள் என்பதைக் கதாசிரியர் சுட்டியுள்ளார்.உருவம்,உள்ளடக்கம்,உத்திமுறை அனைத்தும் ஒவ்வொரு கதையிலும் உள்ளத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றன.மஸீதா புன்னியாமீன் படைத்த சிறுகதைகளில்,நீதி,நியாயம்,நேர்மை நிறைந்த நியம வாழ்வை நாம் தரிசிக்க முடிகின்றது."நெருடல்கள்"என்னும் தலைப்பில் அமைந்த கதை வேலைக்கமர்த்தப்பட்ட ஏழைச் சிறுவனைப் பற்றியது.அச்சிறுவன் வீட்டுக்காரியல் ஏச்சுப் பேச்சுக்களால் துன்புறுத்தப் படும் போது,அவளின் மகள்,அந்த "எத்தின்"மீது கழிவிரக்கங்கொண்டு தாயைக் கண்டிக்கின்றாள்;உழைக்கும் வர்த்தகத்துக்கு உதவிக் கரம் நீட்டும் உயர்ந்த மனம் படித்தவளாய் விளங்குகிறாள்.உழைக்கும் வர்க்கத்தை உதாசீனப்படுத்தாமல்,ஒறுத்து நோக்காமல்,உயர்வை என்ன வேண்டும்;என்ற உயர்ந்த மனப்பாங்கை "சுகமாகிப் போன சுமை"என்ற கதை மூலம் சுட்டிக் காட்டியுள்ளார் மஸீதா புன்னியாமீன் .கதையில் வரும் கதாப்பாத்திரமான கபீர் மாஸ்டர்,தனது அந்திமகாலத்தில் தனக்குரிய வீடு வாசலை நாகூர் பிச்சை என்ற தனது அடிமைக்கு உரித்துடையதாய் உறுதி முடித்து வைக்கிறார்.அவரது மக்கள் தந்தையின் உயர்வான எண்ணத்தை மதித்து,அந்த வேலைக்காரனை உறவுக்காரனாய் அணைத்துக் கொள்கின்றார்கள்.இவ்வாறு,ஒவ்வொரு கதையும் ஒழுக்க மேம்பாட்டையும்,ஒப்ப செப்பமான உயர்ந்த வாழ்க்கைப் போக்கையுமே வலியுறுத்தி நிற்கின்றன.சிறந்த சிறுகதைத் தளத்திற்குச் சோடினை தேவை இல்லை;சுற்றி வளைத்துச் செல்லும் சாகசம் தேவையில்லை.சுவைஞனின் சுவைப்புலத்தைச் சுவீகரித்துக் கொள்ளும் சொல்லாட்சி மட்டும் இருந்தாற் போதும்.இந்த இலாவணியமும்,இரசனையும் இழையோடியணவாய் தோப்பில் மீரான்,சுஜாதா முதலானோரின் கதைகளில் அந்த அழகை நான் கண்டு மகிழ்கின்றேன்."கரும்புள்ளிகள்"என்னும் தலைப்பில் அமைந்த கதைக் கரு இதற்கு நிதர் சமனாகும்.மானிடத் தளம்பல்கள்,மனக்குழப்பங்கள்,மானிதப் பண்புகள் முதலானவற்றைக் கதாசிரியர்கள் கற்பனையில் படைக்கும் போது கையாளும் உத்தி முறைமை ஆளுக்காள் வேறுபடுவதை நாம் காணலாம்.கதாபாத்திரக் கூற்றாக வெளிப்படுவான இன்னும் சில.இந்த இருமுகத் தன்மையும் மஸீதா புன்னியாமீன் கதைகளில் வெளிப்படுவதை நாம் காணலாம்.சோடை போகாத சுவைத் தன்மை இவரது கதைகளில் நிறைந்துள்ளன.அவரது ஆற்றல் முக்கையுச் சிறைக்குள் மூடுண்டு போகாமல்,முகத்திரைக்குள் முடங்கிவிடாமல் முகதரிசனம் தர வேண்டுமென முழுமனதாய் வேண்டுகின்றேன்.
இதயம் பிழிந்து வாழ்த்துகிறேன்.