சனி, 24 டிசம்பர், 2011

தாமரை 06

  பெயர்: யாழ் அஸீம்


யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில் 1952 .09 .15 ஆம் திகதி யாழ் அஸீம் பிறந்தார்.இவர் பல்துறை ஆளுமை மிக்க கலைஞர்.இவரது தந்தை அப்துல் காதர் அவர்களும் ஒரு எழுத்தாளர்.நிறைய எழுதி இருக்கிறார்.ஆனால் அதை வெளிக் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பமும் வாய்ப்பும் அப்போது இருக்கவில்லை.நிறையப் புத்தகங்கள் வாங்கி தனது பிள்ளைகளை வாசிக்கத் தூண்டுவார்.தன் மகனை எப்படியேனும் ஒரு வைத்தியராக்க வேண்டும் என்றே அவர் ஆசை கொண்டிருந்தார்.அஸீம் GCE O /L  எழுதி விட்டு பெறுபேரை எதிர்பார்த்திருந்த வேலை மாரடைப்பின் காரணமாக அவர் வைத்தியசாலையில் சேர்த்த போது காலமாகி விட்டார் .கடைசித் தருவாயில் கூட தன் மகனின் கைகளைப் பற்றிக் கொண்டு நீ வைத்தியராக வேண்டுமென்று கூறினார்.இன்று நினைத்தாலும் அது அஸீமிற்கு கண்ணீர் தரக் கூடிய நினைவுதான். க.பொ.த. (உயர் தரம்) படித்துக் கொண்டிருந்த காலப் பகுதியில் எழுதத் தொடங்கி விட்டாலும் 1990 அக்டோபரில் வட மாகாணத்தில்  முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட பிறந்த மண்ணின் இழப்பும் அகதி வாழ்க்கையின் வலிகளும்,அவலங்களும் இவரை வேகமாக எழுத வைத்தன.

வாடா மாகாண முஸ்லிம்கள் புலிகள் வெளியேற்றப்பட்டமையானது ஒரு பலவந்த வெளியேற்றமாக மட்டுமே பேசப்பட்டது.இதில்  முஸ்லிம்களது சகல சொத்துக்களும் கொள்ளையிடப்பட்டன.இந்த கொள்ளைச் சம்பவமானது இலங்கை வரலாற்றில் இடம் பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவமாகும்.அது வரலாற்றில் போதுமானளவு உள் வாங்கப்படவில்லை. இலங்கையின் பிற மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் யாழ்ப்பணத்தில் வாழ்ந்தனரா என்று ஆச்சிரியத்துடன் வினவியிருக்கிறார்கள்.எனவே தன் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்குச் சமனான நிகழ்வை பதிவு செய்வது வரலாற்றுத் தேவை என உணர்ந்தார்.இன அழிப்பிற்கு எதிரான (Genocide ) எதிரான ஐ.நா. சாசனத்தின் படி சேர்ந்த வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவதும் பண்பாட்டு வாழ்வியலின் தனித்துவ அடையாளங்களை அழித்தலும் இன அழிப்பிற்குச் சமனான குற்றங்களாகும். இவை இரண்டுமே வட  மாகாண  முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டன."எந்த ஒரு சமூகம் தனது சொந்த வரலாற்றை அறிந்திருக்க வில்லையோ அந்த சமூகம் அழிந்து விடும்"  என்ற அல்லா மா இக்பாலின் கூற்றுப் படி எமது வரலாற்றை ஆதாரப்பூர்வமாக எதிர் வரும் சந்ததிகளுக்கு உரிய முறையில் நடத்தி வைக்க வேண்டியது நமது தார்மீக  கடமையாகும் என்ற உணர்வே இன்னும் அவர் பேனாவை இயக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

எழுத்துக்கள் சமூக மாற்றத்திற்குப் பயப்பட வேண்டும்.அப்படி இல்லாத எழுத்துக்கள்  வேறும் பதர்கள் தான். புதிய தலைமுறைக்குச் சொல்வதும்  இதனைத்தான். இலக்கியம் என்றால் அதற்கு இலக்கு இருக்க வேண்டும்.அப்போது தான் அது காலத்தை,சமூகத்தை செழுமையாக்கும்.எமது படைப்புக்கள் சமூக மாற்றத்திற்குப் பங்காற்ற வேண்டும்.அதற்காகத் தான் எழுத வேண்டும் என்று கூறுவார். சமூகத்தில் ஓர் அங்கமாக இருக்கின்றார் யாழ் அஸீம்.உடம்பில் எங்காவது வலி வந்தால் உடம்பு முழுவதுமாகத் தான் வலிக்கிறது.அது போலத்தான் சமூகத்திற்கு ஏதும் வரும் போது அது என்னையும் காயப்படுத்துகிறது.ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் அங்கமாக இருக்க வேண்டும்.தான் சார்ந்திருக்கின்ற சமூகத்தின் முன்னேற்றத்திலும் அபிவிருத்தியிலும் அக்கரை இல்லாவிட்டாலும் அவன் தூய்மையில்லாத இலக்கியவாதியுமல்ல,மனிதனுமல்ல.அந்த வகையில் முடியுமான சமூகப் பணிகளில் தன்னையும் இணைத்துப் பணியாற்றி வருகின்றார்.போரின் வலிகளை,அதன் அவலங்களை நேரடியாக அனுபவித்தவர் உறவினர்கள்,நண்பர்கள்,அயலவர்கள் என பல உயிர்களை பறித்துசக் சென்று விட்ட  இந்தப் போர் மிகக்  கொடியது. ஒரு நாள் இரவு அஸீம் உறங்கிக் கொண்டிருந்த வேளை  ஹெலி கெப்டரில் இருந்து சுடப்பட்ட துப்பாக்கி ரவைகள் இவரது வீட்டுக் கூரையையும் துளைத்துக் கொண்டு சுவரில் பட்டுத் தெறித்தது மயிரிழையில் உயிர் தப்பினார்.

1990 அக்டோபர் முஸ்லிம்களை வெளியேற்ற சில வாரங்களுக்கு முன் போர் உக்கிரமடைந்த வேளை விமானக் குண்டு வீச்சில் இருந்தும் ஷெல் தாக்குதல்களில் இருந்தும் தப்புவதற்காக புதுப் பள்ளி வாசலுக்கு அண்மையிலுள்ள மாடி வீட்டில் பலர் கூடியிருந்தனர்.அப்போது வானில் வட்டமிடப்பட்ட விமானத்தை நோக்கி புலிகள் பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து தாக்கினர்.பதிலுக்கு விமானத்தில் இருந்து போடப்பட்ட குண்டு அந்த மாடி வீட்டின் மீது விழுந்து வெடித்ததில் குழந்தைகள்,பெண்கள் உட்பட 10 பேர் அவ்விடத்திலேயே பலியாகினார்கள்.வார்த்தைகளால் கூற முடியாத அவலங்கள் அவை.அது மட்டுமன்றி அஸீம் தங்கையின் கனவை ஜலீல் புலிகளின் துப்பாக்கி சூட்டுக்கு பலி கொடுத்துள்ளார்.உரிமைக்கான போராட்டங்கள் தவிர்க்கப்பட முடியாதவை.ஆனால் அந்தப் போராட்டங்களின் தூய வடிவம் கெட்டு விடும் போது அது அழிவுக்கே இட்டுச் செல்லும் என்பதற்கு விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி ஒரு வரலாற்று சான்றாகும்.சிறு பாண்மை உரிமைக்காக போராடுவதாக கூறிக் கொண்டு இன்னொரு சிறுபாண்மையான  முஸ்லிம்களை வடமாகணத்தில் இருந்து இனச்சுத்திகரிப்பு செய்தது மட்டுமன்றி அவர்களின் அசையும் அசையா சொத்துக்களையும் கொள்ளையடித்து கிழக்கில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்தமை அவர்களது போராட்டத்தை களங்கப்படுத்தி விட்டது.இத்தகைய பாதிப்புக்களை எழுத்தில் எழுதுகின்றார்.

ஒய்வு பெற்ற ஒரு விஞ்ஞான ஆசிரியரான இவர் சிறந்த ஊடகவியலாளரும் ஆவார்.1998 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட விமர்சன விருது விழாவில் தமிழ்ச் சேவையில் முதலாம் இடத்திற்கான விருதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரத்தூங்காவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.தமிழ் முஸ்லிம் இன உறவைக் கட்டியெழுப்பும் வகையில் இவரால் படைக்கப் பட்ட பல கட்டுரைகள் மற்றும் கவிதைக்காக 2007 ஆம் ஆண்டு இன உறவுகளையும்,தேசத்தையும் கட்டியெழுப்புவதற்கான கேத்திர நிலையம் இவரை கௌரவித்தது.2008 ஆம் ஆண்டு தமிழ் கலைஞர் வட்டத்தின் (தகவம்)சிறுகதைப் படைப்பிற்கான முதலாவது பரிசைப் பெற்றுள்ளார்.சமூகவியல்,புனைக்கதை,சிறுவர் இலக்கியம்,ஆத்மீகம்,விஞ்ஞானம் போன்ற துறைகளில் ஆக்கங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இவரது பல் துறைச் சேவையைப் பாராட்டி கலாபூஷணம்,வடப் புலச்சான்றோர்,சாமஸ்ரீ,தேச கீர்த்தி,அகஸ்த்தியர் போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார்.30 வருட ஊடகவியல் சேவையைப் பாராட்டி வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் 2011 ஆம் ஆண்டுக்கான கௌரவ ஆளுநர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.இவரைத் தொடர்பு கொள்ள வேண்டுமாயின்,



தொடர்புகளுக்கு : யாழ் அஸீம்,
                                     228 /1 ஜும்மா மஸ்ஜீத் வீதி,
                                     மாளிகாவத்தை,
                                     கொழும்பு - 10

தொலைபேசி : 071 - 2268466



இவரின் பணி தொடர இதயத்தால் வாழ்த்துகிறேன்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

தாமரை (05)

 

கிழக்கிலங்கையின் நிந்தவூர் மண் தமிழுக்கு வளம் பல சேர்த்த எழுத்தாளர்கள் ,அறிஞர்களை தந்துள்ளது
அந்த வரிசையில் ஒருவர் தான் இந்த இளைஞர் நிந்தவூர் ஷிப்லி....
பெயர் - நிந்தவூர் ஷிப்லி
விலாசம் :- இல 50 ஹாஜியார் வீதி, நிந்தவூர்-18
படித்தது- பி.பி. (தகவல் தொழிநுட்ப விசேட துறை,தென்கிழக்குப்பல்கலைக்கழகம்),எம்.எஸ் சி (தகவல் முகாமைத்துவம், களனிப்பல்கலைக்கழகம்).
 
பிறந்த திகதி-1985-01-31

இதுவரை நான்குகவிதை நூல்களையும் ஒரு ஆங்கில நூலையும்
எழுதி வெளியிட்டு உள்ளார்
2002ம் ஆண்டு சொட்டும் மலர்கள் என்ற நூலும் ,2006ம் ஆண்டு
விடியலின் விலாசம் என்ற நூலும் ,2008ம் ஆண்டு நிழல் தேடும் கால்கள் என்ற நூலும் ,2009ம் ஆண்டு "தற்கொலைக்குறிப்பு" என்ற நூலும் அதே ஆண்டில் "தகவல்' முகாமைத்துவம்" எனகஜற ஆங்கில நூலும் 
வெளியிட்டு உள்ளார்.. கவிதை தவிர ஆய்வு முயற்சிகளிலும்
நிறைய ஈடுபட்டு உள்ளார்."தேசிய ஒருமைப்பாட்டை இலங்கையில் நிலைநிறுத்துவதன் அவசியம் என்ற ஆய்வு இலங்கை சமாதான செயலகத்தினால் சிறந்த ஆய்வாக 2005 இல் தெரிவானது.
அத்தோடு "இணையமும் தமிழும்"இலங்கையின் இணையப்பாவனை" போன்ற ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராக இதழாசிரியராக மற்றும் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.. நிஷ்டை என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும்
பணியாற்றியுள்ளார்..தவிர மாற்றுக்கருத்துக்கான சினிமா அமைப்பின் நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளராகவும் முஸ்லிம் மஜ்லிஸின் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்..மேலும் நிந்தவூர் இளம்பட்டதாரிகள் சங்க செயலாளராகவும் சிறிது காலம் தலைவராகவும் பணிபுரிந்ததோடு கிழக்கு மாகாண பசுமை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினராகவும் கடமை
புரிந்துள்ளார்..

பத்திரிகைகளை பொறுத்தவரை இலங்கையின் தினகரன் வாரமஞ்சரியின்
கவிதைப்பூங்காவில் இதுவரை 200 இற்கும் மேற்பட்ட கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. இன்னும் வீரகேசரி,சுடர் ஒளி,தினமுரசு, நவமணி போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி
வருவதோடு மல்லிகை,படிகள்,நிஷ்டை, பெருவெளி போன்ற சஞ்சிகைகளிலும்
பங்களிப்புச்செய்கிறார்..,இணையத்தளத்தை பொறுத்த வரை கீற்று, வார்ப்பு, தமிழ்மன்றம், தமிழ்
ரைற்றர்ஸ், திண்ணை போன்றவற்றிலும் நிறைய எழுதுகிறார்..

தென்னிந்திய தமிழ் ஆல்பங்களில்
பாடல்களும் எழுதியுள்ளார்.. இலக்கியப்பணிகளுக்காக தினகரன் வாரமஞ்சரியாலும் இலங்கை
நேத்ரா தொலைக்காட்சிக்காகவும் பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்..முதலாவது தொகுப்புக்காக
கவியரசர் வைரமுத்துவினால் நேரடியாக பாராட்டுப்பெற்றதோடு மக்கள் அரங்கம் புகழ்
விசுவினாலும் பாராட்டப்பட்டுள்ளார்..தமிழ் மன்றம் இணையத்தளம் நடாத்திய கவிதைப்போட்டிகளில்
இரண்டு முறை தங்கப்பதக்கமும் ஒரு முறை வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார்..அத்தோடு "கவிமுத்து" என்ற பட்டமும் இவருக்கு கிடைத்து இருக்கிறது.

இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் உதவி விரிவுரையாளராக பணியாற்றிவிட்டு தற்போது இலங்கை உயர்தொழிநுட்ப நிறுவகத்தில் முகாமைத்துவ விரிவுரையாளராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்..

கவிதையில் நல்ல இலக்கை


எட்ட வேண்டும் என்பதே இவரது ஆசை.அதற்கான ஆரம்ப முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத்துணிந்து முயற்சிக்கிறார்.ஷிப்லியின் கலை ஆர்வம் பனித் தூறளாய் பரவிப் படர துவழா  அன்போடு வாழ்த்துகின்றேன் ..!!!!!

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

தாமரை(04)







பெயர் : குமாரி கே.எஸ்.செண்பகவள்ளி (மலேசியா)
                     (K.S.SENBAKAVALLY)
உலகச் செம் மொழிகளில் உயர் தனிச் சிறப்புடையது தமிழ் மொழி உலகில் வாழும் தமிழ் பேசும் இதயங்கள் தமிழை உயிராய், உணவாய் ,உணர்வாய் ,உழைப்பாய்,உழைப்பின் விளைவாயக்  கண்டுணர்ந்து வாழ்பவர்கள். 
உலக இலக்கிய
ங்களுக்குள்  தமிழ்  இலக்கியதிற்கு தனியொரு இடமுண்டு
 ஆம்  கடல் கடந்து  வாழும் (மலேசியாவை )பிறப்பிடமாகவும் ,வசிப்பிடமாகவும்  கொடவர் தான்  குமாரி கே .எஸ் . செண்பக வள்ளி (செண்பா ).
                       புதிய பார்வைகளோடு ,  புதிய  சிந்தனைகளோடு நாளைய தலை முறைகளையும் கருத்துக் கொண்டு இலக்கியங்கள்  படைக்க்  வேண்டுமென்று  விரும்புபவர்  சம  காலத்திலும் ,எதிர் காலத்திலும் இலக்கியத்துக்கு என்ன நாம் பங்களிப்பை செய்யப்  போகிறோம் என்று சிந்திப்பவர் .





சுமார்  (25)வருட  காலங்களுக்கு  மேலாக கலை இலக்கியப்  பயணத்தில் உலா வந்தது கொண்டிருக்கின்றார்
கல்வி ..,
கல்வி : Bachelor in Business Administration
BBA (Hons), USA  வரை  கற்றவர்

தொழில் :
.தற்போது  இவர்  மலேசியாவில்  மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக் காப்பகம் (ATIONAL ARCHIVE OF MALAYSIA) அதிகாரியாக  (ARCHIVIST) கடமை  புரிந்து வருகின்றார்.

இலக்கியப் படைப்புகள்: சிறுகதைகள்,கவிதை (மரபு, புதுக்கவிதை, ஹைக் கூ) புதுக்கவிதை, ஹைக் கூ)   கட்டுரை  ,வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள்)என எழுதி வருகிறார் .
கல்வி ,வறுமை ஒழிப்பு,  குழந்தை தொழிலாளர் ஒழிப்பு,   பெண்கள் விழிப் புணர்வு ,சமூக நீதிக் கொள்கை  போன்ற பல  சிந்தனைகளை  தனது  எழுத்துக்களோடு வெளிப்படுத்திக்  காட்டுபவர்.


தனது (13)வது வயதில் 1986 - ல் முதலாவது கவிதை தமிழ்நேசன்மலரில்  வெளியானது அதைத் தொடர்ந்தது
1990 - முதலாவது சிறுகதை - தமிழ்நேசன் 70ம் ஆண்டு மலர்
2004 - முதலாவது ஆய்வுக்கட்டுரை - வெளியாகின 
இதுவரை
கவிதை (மரபு, புதுக்கவிதை, ஹைக்கூ) : 65
இணைய இதழ் படைப்புகள் : 15
சிறுகதை, ஒரு பக்கக் கதைகள் : 46
ஆய்வுக்கட்டுரைகள் : 57 (மலாய் மொழியில் 6)
விமர்சனங்கள்  என்று  எழுதி வருகின்றார்
பெற்ற விருதுகள் ,

வாசகர் நற்பணி விருது (VNV - 2005)
சிறந்த சேவையாளர்   விருது     (2007)போன்றவற்றை

பரிசுகள் : சிறுகதை, கவிதை, கட்டுரை
நாளிதழ், வார, மாத இதழ்கள், பொது இயக்கங்கள் நடத்திய இலக்கியப் போட்டிகளில் பங்குக் கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளார் .
 அவைகள்,

தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம்,
கிள்ளான் வாசகர் இலக்கியச் சோலை,
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்,
மக்கள் ஓசை,
தமிழ் நேசன்,
மன்னன் மாத இதழ்,
சூரியன் மாத இதழ்,
மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகம்,
பொது இயக்கங்கள் போன்றவைகள்



பொதுச்சேவை:
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் : துணைச் செயலாளர் ,
சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கம் : துணைச் செயலாளர் ,
சுங்கை சிப்புட் வாசகர் இயக்கம் : தலைவி,
இலங்கை  .தாடகம் கலை இலக்கிய வட்டம் :  ஆலோசகர் .


தற்சமயம் ஈடுபட்டிருக்கும் இலக்கியத் துறைகள்

நாளிதழ், வார, மாத இதழ்களில் சிறுகதை, கவிதை, கட்டுரை எழுதி வருகின்றார் .

“தங்கமீன்”, “திண்ணை”, “மலேசிய எழுத்துலகம்” ஆகிய
இணையத்தளங்களில் படைப்புகளை எழுதி வருகின்றார்

நாட்டின் தேசத்தலைவர்கள், முக்கியமான நாட்களை குறித்து ஆய்வுக்
கட்டுரைகள் எழுதி வருகின்றார் .

மலேசிய மண்ணில் (கலை உலகில் )தமிழ் மொழி இலக்கியத்தின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டிருக்கும் பெருமிதம் மிக்க சகோதரியின் தொடர்புகளுக்கு ,


பெயர் : குமாரி கே.எஸ்.செண்பகவள்ளி
(K.S.SENBAKAVALLY)

முகவரி : 516, தாமான் துன் சம்பந்தன்,
31100 சுங்கை சிப்புட் (வ),
பேராக் டாருல் ரிட்சுவான், மலேசியா
மின்னஞ்சல் -: ksvally@yahoo.com

பூமிக்கடியில்ஈரம் இருக்கின்ற இடமெல்லாம் தன் வேர் விரல்களை நீட்டும் அடி மரம் போல்
சென்பாவின் சிந்தனைகளும் நீண்டு செல்ல இதயம் பிழிந்த வாழ்த்துக்கள் தென்றலாய்  தடவிக்  கொள்ளட்டும் ..!


வியாழன், 20 அக்டோபர், 2011

தாமரை .....3 நாகபூஷணி கருப்பையா ...!


80 ,களுக்குப்  பின் செந்தமிழ்  கவிதா விசும்பிலே உலா  வந்த  கவிதையாளர்களின் பட்டியல்  விசாலமானது .
எனினும்  குறிப்பிட்டுச்  சொல்லக்  கூ டிய பெண்களில் ஒரு  சிலரே கவிதையுலகில் கால்  பதித்து நம்பிக்கையை ஏற்படுத்திச்  செயல்  பட்டு வருகின்றனர் .
அந்த வரிசையில் ஒருவர் தான்  இந்த  நாடறிந்தபெண் கவிஞர்
 நான் அறிந்த நல்ல  தமிழ்க்கவிஞர், திறமையான  அறிவிப்பாளர் என் நட்புக்கு  முதல்  பரிசு இவர்
இலக்கண வரம்பும் ,மரபும் மாறது கவிதை  புனையும் வல்லபம் மிக்கவர்
வெள்ளமென இனிக்கும்  நல்ல தமிழோசை' !
சொல்லச் சொல்லச் இனிக்கும் சுந்தரந் தமிழோசை !
கவிதையென்னும்ஒளிப்படக்  கருவி மூலம்  தன்னிதயத்து உணர்ச்சிகளுக்கு வண்ணமான வடிவமைக்கும்  கவி வல்லவள் .
கலை,இலக்கிய  நெடும் விழிப்புக்கு  விசாலமான  மூலம் பற்றி சரியாகப்   புரிந்து கொண்டுள்ள நாகபூஷணியின் சமூக நோக்கும்  இன , மொழி ,மத  பேதமற்ற மானிட  நேயமும் வெவ்வேறு
வகைகளில் கவிதைகள்  முழுவதும்  இழையோடி  நிற்பதை அவதானிக்கலாம் .
அடக்கமான  சுபாபம் கொண்ட அறிவிப்பாளர் .கன மிகக்   தரமான படை ப்புக்கள்  ஏறத்தளக் கடந்த் பத்தாண்டுகளுக்கு  மேலாக இலங்கையின்  அனைத்து  இதழ்களிலும்  உலா வந்துள்ளன
     கம்பளையில்  பிறந்த்த  நாகபூஷணி    ஆரம்பக்  கல்வியை 3 ம் தரம்  வரை கம்பளை மகளிர் கல்லூரியில்  பயின்றார் .பிறகு நாவலப்பிட்டி சென்  அன்றுஸ்  மகளிர்  கல்லூரியில் பத்தாம்  தரம் வரை பயின்று உயர்  தரத்தினை கதிரேசன்  கல்லூரியில் கற்றார் .
யாழ்ப்பாணப்  பல்கலைக்கழகத்தில்  கலைத்  துறையில் பட்டப் படிப்பை ஆரம்பித்தார்.
நாட்டின் அன்றைய நிலவரங்களால் சூழ்நிலைக் கைதியாகி பிறகு பேராதனை வளாகத்தில் 1994 இல் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தார்
.கண்டி மலையக வானொலிச் சேவையில் 1994 இல் பகுதி நேர அறிவிப்பாளராக சேர்ந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக 1995 இல் தெரிவு செய்யப்பட நாகபூஷணி தமிழ் தேசிய சேவையின் கல்வி நிகழ்ச்சிகளில் பணியாற்றினார்.பின் வர்த்தக சேவையில் பகுதி நேர அறிப்பாளரானர்.1996 இல் நிரந்தர தயாரிப்பாளராகவும்,அறிப்பாளராகவும் உயர்வு பெற்றார்.1998 இல் ஐ.றி.என் தொலைக்காட்சியில் அறிவிப்பாளரான நாகபூஷணி 1999 ல்'இதழியல் டிப்ளோமா ' கற்கை   நெறி
  யினைப் பூர்த்திசெய்தார்    தேசிய தொலைக்  காட்சியின்   'ஆயுபோவன் "மற்றும்  'மனையாள்  மண்டபம் 'போன்றவற்றில்    தோன்றியதுடன் 2000   மார்கழித்  திங்கள்  முதல் இலங்கை  ரூபவாஹினியில் செய்திஅறிப்பாளராகினார் .இலங்கைலிருந்து   கவி புனையும்  திறனும் ,கட்டுரைகள் எழுதும்  ஆற்றலும்கொண்டவர்.இசையிலும் ,நடனத்திலும்  கூட  ஆர்வம்  கொண்டவர் என்பது  குறிப்பிடத்தக்கது .
சம கல நிகழ்ச்சிக்குள் அந்திப்புழுதை  அழகு செயும் 'அந்தி நேரச் சிந்துகள்' நிகழ்ச்சி தனித்துவம் பெற்று விளங்குகின்றது.இலக்கியங்களைப் போன்று வானொலிகளும்,வைகறை,பொன்னந்தி,நிலாநேரம் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் பல ஏற்பாடுகளைச் செய்துள்ளன.அந்திப் பொழுதை அழகு செய்யும் 'அந்தி நேரச் சிந்துகள்'நிகழ்ச்சியின் குறியிசைக்குள் புகுந்து வான் அலைகளில் தவழும் நாகபூஷனியின் குறள் முகவரியில்லாத ஓர் இலக்கியச் சுவையைப் பிரதிபலிக்கின்றது.
நிகழ்ச்சியின் கவிதைச் சித்தரிப்பு
பூஷணி தனிச் சிறப்பு
கவி நயங்களில் தொனிக்கும் நயப்பு
இருக்கிறது அதற்கொரு தனி மதிப்பு......
!
ஓர் இலக்கியக்கரு சங்க அகத்திணை, புறத்திணையில் ஆரம்பித்து பல ஆண்டுகளைத்தாண்டி நவீன கால சினிமாப் பாடலுக்குள் சங்கமிக்கும் போது ஏற்படும் சுவைக்கு கவித்துவத்தினூடாக அழுத்தம் கொதிக்கிறது நிகழ்ச்சி.குறிப்பிட்டதொரு விடயம் சம்பந்தமாக புராண இலக்கியங்கள்.இடைக்கால கவிஞர்கள்  நிகழ்கால சினிமாக்கள் சொல்லும் வித்தியாசமான கருத்துக்களின் நடுவில் நின்று தனது கருத்தையும் அறிவிப்பாளர் முன்வைக்கும் போது "தமிழின் வளமும்,செழுமையும்"பிரத்தியட்சமாக புலப்படுகின்றது.புராண காலங்களில் நிலவினால் மனிதன் ஆடையுடித்தினான்.இடைக்காலத்திலே நிலவொளியில் அவன் கடிதம் எழுதினான்.இன்று  நிலவின் கீழ் மனிதன் வாழ்க்கை நடத்துகின்றான்.இந்தப்  படிமுறை வளர்ச்சியை அறிவிப்பாளர் குறுகிய நேரத்தில் படம் பிடித்து காட்டுகின்றார்.அது வியக்கவல்லது.இவ்வாறான நிகழ்ச்சிகளை ஒரு முறை கேட்டும் அவை நெஞ்சிலிருந்து நீங்குவதே இல்லை.
இலங்கையின் வானொலி நிலையங்களில் கடமை புரியும் பெண் அறிவிப்பாளர்களை "கவிதை சொல்லும்" விடயத்தில் நாகபூஷணி மிஞ்சிவிட்டார்
என்பதே பலரதும் கருத்து.சில கருப் பொருட்களைக் காட்சிப் பொருளாகக் காட்டும் திறம் இவரிடம் நிறையவே உள்ளது.சிலர் கவிதை சொல்லும் போது அவை கட்டுரை வடிவம் பெறும் சந்தர்ப்பங்களும் உண்டு.சிலர் கவிதை சொல்லும் போது அதில் வைக்கோல் சுவை கூட தெரிவதில்லை.ஆனால் நாகபூஷணி கவிதை சொல்லும் விதம் இறந்து கிடக்கும் இதய நரம்புகளையும் உயிப்பிக்கின்றது.

தமிழ்  தன்னைபேசுகின்ற  உலகந்தன்னில்
தனித்துவமாய் இலங்கும் வான் ஒலியாய் இன்று ,
அமுதெனவே  ஒலிகின்ற தென்றல்  தன்னின்
அறிவிப்பு  நங்கையவள்  நாகபூஷணி.!
குமுறுகின்ற  நெஞ்சுடனே காலம்  தள்ளும்
குன்றுகளுக்குக் கிடையில்   வாழ் மாந்தர்க்குள்ளே ,
அமுதாக  வந்ததனால் தானே நீயும்   
அற்புதமாய்  தமிழ்தனிலே நர்த்திக்கின்றாய் !

வானலையில் இவள் குரலோ ஒலிக்கும் போது
வண்டமிழோ உவகையதால் எழுந்து நின்று
கானமிசைக் கின்ற பெரு காட்சி தன்னை
காணுகையில் நெஞ்சமெலாம் மகிழ்ச்சிப் பூக்கள்.
தேனமுதாய் தெள்ளு தமிழ் நாகா வாயுன்
தெவிட்டாது வருவதுதான் சிறப்பு ஆகும்.
கானகத்து மான்மயிலும் எழுந்து ஆட,
கன்னியிவள் குரல் சொல்லும் கவிதை போதும்....!

அறிவிப்பால் நெஞ்செமெலாம் நிறைந்து நிற்கும்
அழகுமலை தந்த பெரு நாகா இன்று
செறிவு நிறை அறிவுதனைக்  கொண்டு இங்கு
செதுக்கிய நற் கவிகளினைக் கோர்வையாக்கி
நெறிதவழ நெற்றிக்கண் என்ற நல்ல-
நெஞ்சு நிறை கவிதை நூல் தருகின்றாளே
அறிவுதனை கொண்டனள் நாகா உந்தன்
அழகுதமிழ் கவிகளதோ என்றும் வாழும்...!

மரபோடு புதுசுகளும் கலந்து இங்கு
மகிமையொடு வருகிறது நெற்றிக்கண்ணும்....!
சிரம் தாழ்த்தி நிற்கிறதே இலங்கை பூமி
சீக்கிரத்தில் இவள் பெரிய ஒளவையாக -
உராம் பெற்ற கவிக்குயிலாம் சரோஜினியாய்
உருவாவாள்...! இவள் கவிதைக் காலம் வென்று
நிரந்தரமாய் உதவிடுமே வாழ்க நீயும்...!

நாகா நீ எழுதுகின்ற கவிகள் யெல்லாம்
நானிலத்தில் வாழுகின்ற மனுசங்கட்குள்,
சாகாவ ரம்பெற்று வாழும் என்று
சாற்றுகின்றேன்...! உன் கவிதை எழுந்து பேசும்.....!
பாகாக உருகிவிடும் கவிதை காணும்
பார்தன்னின் மனசெல்லாம் என்றும் உந்தன்
நோகாத கவியெல்லாம் உலகை வெல்லும்
நோக்கங்கள் சிறப்பாக பெற்றாய் வாழ்க....!!!!
                                           ரீ.எல்.ஜவ்பர்கான்.
பல விருதுகளையும்  ,பாட்டுக்களையும் பெற்றுள்ள நாகபூஷணிக்கு தடாகம்  கலை  இலக்கிய  வட்டம்'' கலைத்தீபம்'',
விருது  வழங்கிகௌரவப்படுத்தியது   தற்போது  வசந்த்தம்  தொலைக்காட்ச்சியில் தனது  திறமையினை வெளிப் படுத்தி வருகின்றார் .
இந்த பைந்தமிழ்ப் 'பாவை'யின் நறுந் தமிழ் பாக்கள் இன்னும் செழித்துப் பூக்கட்டும்.தமிழுக்கினிமை  சேர்க்கட்டும் என







இதயங்கனிந்து வாழ்த்துகிறேன்...........!

செவ்வாய், 18 அக்டோபர், 2011

தாமரை .........2 மின்னல் வேக அறிவிப்பாளர் - முத்தையா ஜெகன்மோகன்.....


முத்தையா ஜெகன்மோகன் நுவரேலியா மாவட்டம், டயகம எனும் ஊரில் பிறந்தார்.
  இவர் நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியில் 7 ம் வகுப்பு வரை படித்துவிட்டு அதன் பின்பு யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் க.பொ.சா.தரம் படித்து முடித்தார்
.இவர் உயர் தரக் கல்வியை தொடர்ந்து கண்டி புனித சில்வர்
ஸ்டர்ஸ் கல்லூரியிலும்,நாவல் நகர் கதிரேசன் கல்லூரியிலும் கற்றார்.
.1980  ம் ஆண்டு பொறியியளாளராக அரச பொறியியற் கூட்டுத்தாபனத்தில் கடமையில் சேர்ந்தார்.
மலையக மைந்தனாகிய இவர் , தமிழ் அறிவை யாழ்ப்பாணத்தில் கற்றார்.
 நுவரெலியாவில் பிறந்தாலும் வளர்ந்தது வடக்கில் என்பதை பெருமையோடு என்றும் கூறுவார்.
முத்தையா ஜெகமோகனின் தந்தை வெள்ளைச்சாமி முத்தையா,தாய் செல்வநாயகி முத்தையா.
 நான்கு சகோதரிகளும்,இரண்டு சகோதரர்களும் இவருடன் பிறந்தவர்கள்
இவர் குடும்பம் ஒரு கலைக்குடும்பம்
.இவர் கடைசி மகன்.
 சகோதரி நம் அபிமானம் பெற்ற பிரபல வானொலி,தொலைகாட்சி அறிவிப்பாளர் உமா சந்திரா முத்தையா
.இவர் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியல் கல்விகற்று பேராதனை பல்கலைக்கழக சிறப்பு பட்டதாரி.
அத்துடன் விரிவுரையாளராகவும் கடமையாற்றியவராவார்.
முத்
தையா ஜெகமோகன் 1993 இல் பகுதி நேர அறிவிப்பாளராக( 6 பேர்களில் இவரும் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்)
வர்த்தக சேவையில் சிறந்த புள்ளிகளுடன் தெரிவானவர்.
அத்தோடு எந்த விதமான அரசியல் செல்வாக்கில்லாமல் வந்தவர் என்பதில் பெருமையடைகிறார்
 

1994 - 1996 வரை ஆசிய சேவையில் ஆரம்பகாலத்தில் தொடர்ச்சியாக கடமையாற்றி, 1998 இல் தமிழ் நாடு புதுக் கோட்டை மாவட்டம் ஆலங்குடி என்ற இடத்தில் இவருக்கு இலங்கை வானொலி ரசிகர் (ஆசிய சேவை) மன்றத்தின் தலைவரான துரைசெல்வராஜாவால் "மதுரக் குரலோன்"என்ற பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்டார்.

.தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றியதோடு வானொலியில் அணைத்து நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றினார்.
குறிப்பாக கிரிக்கட் வர்ணனையில் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கப்பட்ட சாராம்சத்தை சில நிமிடங்களில் சொல்வதில் வேக அறிவிப்பாளர் என்று பாராட்டப்பட்டார்

 2001 ம் வருடம் மறக்க முடியாத வருடம். முத்தையா ஜெகமோகன் வாழ்வில் மறக்க முடியாத அம்சம்.
இவர் தாய் நாட்டில் இவரை எந்தவித ஊடகமோ,பத்திரிகையோ,எதிர்ப்பார்க்காத அளவிற்கு திடீரென்று தமிழகத்தில்  பாராட்டுவிழா வைபவம் நடாத்தியது .

பிரத்தியோகமாக தமிழகத்துக்கு அழைத்து கௌரவித்தது இவரால் மறக்க முடியாது.
2011 ம் ஆண்டு நவம்பர் 26 ம் திகதி இவர் வாழ்வில் பொன்னாள்.
ஏனென்றால் தமிழர்களில் 1 1/2 கோடி மக்கள் கொழும்பில் சர்வதேச வானொலிக்கு பிரத்தியோகமாக உள்ளனர்

.அத்தனை போரையும் சம்பாதித்தது இவரது குரல்.மூளை முடுக்கெல்லாம் முத்தையா ஜெகன்மோகன் என்றதும் இவருக்குள் பெருமை  இல்லாமல் எதுவரும்

இராமேஸ்வரம் தொடங்கி சேலம் வரை அதாவது தமிழ் நாட்டில் தெற்கிலிருந்து வடக்குவரை எல்லா இடங்களிருந்தும் மண்டபம் நிறைய ரசிகர்கள் வந்திருந்து வாழ்த்தியதுடன் "மின்னல் வேக அறிவிப்பாளர்"என்ற பட்டமும்,"இலங்கையின் சலங்கை  ஒலி" பட்டமும் சூட்டினார்கள்.

மின்னல் வேக அறிவிப்பாளர் என்ற பெயர் இவர் அபிமானம் பெற்ற சேலம் ஆத்தூர் கண்ணன் என்பவரால் சூட்டப்பட்டது

.இலங்கையின் "சலங்கை ஒலி"என்ற பட்டம் இராமேஸ்வரம் இவர் அன்பு உள்ளம் மதினா என்பவரால் சூட்டப்பட்டது.

மின்னல் வேக அறிவிப்பாளர் என்று என் சூட்டப்பட்டது என்று திரு . ஏ கண்ணனிடம் கேட்டாள் தமிழக நேயர்களின் விலாசம் முழுவதும் வாசித்து அவர்களின் வாழ்த்தையும் வாசித்து,நீண்ட பெயர் பட்டியலையும் விரிவாக தெளிவாக வாசித்து அனைத்து உள்ளங்களிலும் நிறைந்து நிற்கும் அறிவிப்பாளர் முத்தையா ஜெகன்மோகன் என்று கூறினார்.

பல அறிவிப்பாளர்கள் வந்து போனாலும் தமிழக மூளை முடுக்கு இடங்களெல்லாம் அனைத்து பெயர்களையும் கூறுவதோடு எம் இல்லங்களுக்கு இவர் வந்து போன உணர்வை இவர் அறிவிப்பில் காண்கிறோம்.
அத்துடன் குறிப்பிட்ட நேரத்தில் பல பாடல்களோடு அனைத்து பெயர்களையும் மின்னலென வாசித்து எம்மை வியப்படைய வைப்பதால் "மின்னல் வேக அறிவிப்பாளர்"என்று பெயர் சூட்டியதாக சேலம் ஆத்தூர் ஏ.கண்ணன் விழாவில் பேசினார்

.இராமேஸ்வர நேயர்கள் சார்பில் இமேஜ் ரவி,மதினா போன்றோர் இணைந்து சூட்டினார்கள்.
விழாவில் மதினா உரையாற்றுகையில் முத்தையா அவர்கள் வானொலிக்கு வந்து நேயர் அரங்கம் எனும் நிகழ்ச்சி செய்தால் எம்மை இலங்கை வானொலியில் உள்ளே அழைத்து அமரவைத்து நிகழ்ச்சியில் விரும்பிய பாடல்களை நாம் கூறுவது போன்ற உணர்வோடு தொகுத்து வழங்குவது அருமை.

அத்தோடு நிகழ்ச்சி ஆரம்பம் தொடங்கி இறுதிவரை இருக்கும் உற்சாக ஒலி இதற்காகவே இலங்கையின் சலங்கை ஒலி என என் அடிமனதிலிருந்து வரும் பெயராக நான் சூட்டுகிறேன்
.திருநெல்வேலி மாவட்டம் லயன்ஸ் கழக கவர்னர் இவர் அபிமான மற்றுமொரு நேயரான லயன் A .P .S . ரவீந்திரன் விழாவில் உரையாற்றுகையில் இலங்கை வானொலியில் என் விருப்பம் நிகழ்ச்சி நடத்துகையில் அது எங்கள் விருப்பமாகத்தான் இருக்கும்.பள்ளிப்பருவம் தொடங்கி பருவ வயது வரை வந்த நினைவுகளை மீட்டி மனதை மறக்காத பாடல்களையெல்லாம் தருவதில் வல்லவர் முத்தையா என்று அவர் மேலும் கூறினார்.


.அந்த விழாவில் இறுதியாக உரையாற்றுகையில் இவருக்கு பேசுவதற்கு நா வரவில்லை.காரணம் ரசிகர் கூட்டம்.ஆனந்தப் பெருக்கோ,ஆனந்த அதிர்ச்சியோ,என்று தெரியவில்லை.ஒருவராக சமாளித்து அவரது உரையை ஆரம்பித்தார்
.சுமார் 11 வருடங்களாக கடமையாற்றும் அதாவது ஒரு பகுதிநேர அறிவிப்பாளராக கடமையாற்றும் இவர் வாரத்தில் ஒரு நாள் கொழும்புக்கு சர்வதேச வானொலிக்குள் நுழைந்து ஏறக்குறைய  தமிழகத்தில் அரைவாசி நேயர்களை ஈர்த்துள்ளார் என்றதும் கைதட்டல் அடங்க 5 நிமிடங்கள் சென்றது
.இந்த நிகழ்வுக்கு மற்றுமொரு பெருமை தமிழக வானொலிகளில் சில திருநெல்வேலி நாகர்கோவில்,மதுரை வானொலி அறிவிப்பாளர்கள் சிலரும் வருகை தந்ததுதான்.இவர்கள் அனைவரின் உரைகளைத் தொடர்ந்து இறுதியாகத் தான் முத்தையா ஜெகன்மோகன் அவர்களின் உரை இடம்பெற்றது
.பல சுவையான மறக்க முடியாத நிகழ்வுகளை பகிர்ந்ததொடு இவர்களைப்போன்ற அறிவிப்பாளர்களை எந்த புகழ் வாய்ந்த அறிவிப்பா
கர்கள் வளர்க்கவில்லை.இவரின் சொந்த முயற்சியில் இறைவன் தந்த இந்தக் குரலினால்  ஈர்த்தேடுத்துள்ளார் என்ற பெருமையைக் கூறுகிறார்.

இதிலிருந்து ஒன்றைக் கூறலாம் எந்த ஒரு கலைஞனின் திறமையையும் யாராலும் ஒடுக்க முடியாது.ஒரு நாள் திறமை வெளிப்பட்டே ஆகும்.
எவ்வளவோ தொலைகாட்சி,வானொலிகள் வளம் வரும் இந்த வேலை ஒரு வானொலி அறிவிப்பாளரின் திறமைக்கு இன்றும் இவ்வளவு மவுசு இருக்கின்ற தென்றல் இது பெரும் ஆச்சிரியம் என்று முத்தையா ஜெகன்மோகன் கூறினார்.

.அந்த நிகழ்வுக்கு பிறகு மூன்று இடங்களில் பாராட்டு விழா இடம் பெற்றது.கும்பகோணம்,தஞ்சாவூர்,திருச்சி போன்ற இடத்தில் இடம் பெற்றது.குறிப்பாக சென்னை வானொலி,திருநெல்வேலி வானொலியில் அறிவிப்பாளர்கள் மத்தியில் சிறப்பான மொழிவளம் என்ற அம்சத்தில் எப்படி சொற்களை பிரயோகிப்பது என்ற சிறப்பு பெட்டி நிகழ்ச்சியை நடத்தினார்.
இப்படி பல மேடைகள் கண்ட இவர் போன்ற கலைஞர்களுக்கு தொலைக்காட்ச்சிகள் குறிப்பாக தேசிய தொலைக்காட்சியில் எந்தவிதத்திலும் இந்த பாராட்டைப்பற்றியோ அல்லது இவருக்கு ஒரு பேட்டி அளிக்கும் சந்தர்ப்பமோ தரவில்லை
.இதே நேரத்தில் திருநெல்வேலி கரன் டிவி,கும்பகோணம் தொலைக்காட்சி நிலையத்தில் கூட கூப்பிட்டு  பேட்டி கண்டது இவருக்குப் பெருமை.
அதே நேரத்தில் தமிழகத்திலிருந்து பலர் வந்தாலும் அவர்களை உடனே அழைத்து அவர் பற்றி புகழ் பாடும் எம் தேசிய தொலைக்காட்சியை நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

கடந்த செப்டெம்பர் மாதம் 11 ம திகதி மட்டக்களப்பில் நடந்த மாபெரும் கண்காட்சியில் அதாவது அரச கைத்தொழில் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் புனித மைக்கல் கல்லூரி மண்டபத்தில் இவருக்கு பாராட்டு வைபவம் தேசிய தொலைகாட்சி கலைஞர் திரு.ஈஸ்வர ராஜா தலைமையில் நடாத்தியது
.கல்முனையில்  கடந்த செப்டெம்பர் மாதம் 26
திகதிதடாகம்  கலை இலக்கிய வட்டம் நடாத்திய விழாவில் 
கலைமகள்ஹிதாயாரிஸ்வியின் தலைமையில் பாராட்டி ;கலைதீபம்' பட்டம்  வழங்கி  கௌரவிக்கப்பட்டார்
இந்நிகழ்ச்சியில் ஏராளமான தென்றல் அறிவிப்பாளர்கள்,நேயர்கள் சகிதம் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

.ஆரம்பகாலத்திலிருந்து இவருக்கு இந்த அளவிற்கு விட்டமின் மாத்திரை போன்று பின்னால் உந்திவிடுவது யார் என்று கேட்பீர்கள்?இவரின் அன்பான மனைவி சாந்தி தான்.இன்னும் ஏராளமான அறிவிப்பாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.இவரை விட ஒருபடி முன்னேற இவர் பக்க உதவியும்,ஆலோசனையும் என்றும் இருக்கும்

மேலும் மேலும்  உயர  எனது வாழ்த்துக்கள்.  நிழல்களாக  ...!!!!!!!!

திங்கள், 17 அக்டோபர், 2011

இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் ....!


இலங்கை  மண்ணுக்கு  புகழ் பெற்றுத்  தந்த  பெண் அறிவிப்பாளர்  திருமதி இராஜேஸ்வரி சண்முகம் ....!
........................................................................................................
வானொலி என்றால் அது இலங்கை தான்.  அது  போல 
வானொலிக் குரலுக்குச் சொந்தக்காரி  மதிப்பிற்குரிய அம்மா  திருமதி....இராஜேஸ்வரி சண்முகம்....!
                  குழல்  இனிது ;
                  யாழ்  இனிது .....
                 மழலைச்சொல் - கேளாதவர் .
ஆனால்  திருமதி இராஜேஸ்வரி சண்முகம் - அவர்களது  குரலில் ஒரு ஈர்ப்புச்  சக்தி  இருக்கின்றது.எழுத்துக்கள்  உச்சரிக்கும்  பொழுது வார்த்தைகள்  சகா வரம்  பெறுகின்றன.
                  சொல் நயம்
                  ஒளி நயம்
 அதற்கெல்லாம்  மேலாக இயற்கை   கொடுத்த  குரல் நயம்
 அதை உபயோகிக்கக்  கூடிய"  சூழ் கலை  நயம் "
வானொலி  செய்த பாக்கியமோ,
நேயர்கள்
செய்த பாக்கியமோ,
இலங்கை
செய்த பாக்கியமோ - எல்லாவற்றிக்கும்   மேலாக  நாம்  கேட்கும் பாக்கியம்..!
மழையின்  சாரல்களை அவரின்  குரலில்  சந்
திக்கிறோம்.
அலங்காரத்தின் 
அலங்காரமாய்  ஜோலிக்கிறார் அவர்  குரலால் ...கேட்கிறோம்....!
 
16.03.1938  ம திகதி கொழும்பு கொட் டாஞ்சேனையில் இராஜேஸ்வரி பிறந்தார்.
தனதுஆரம்பக் கல்வியை  ஆங்கில்மொழியில் கற்ற இவர் இன்று தமிழிலே புகழ் பூத்துள்ளார் .இவரது  தமிழ்  கலப்பற்ற   தூய தமிழாகும் .1952 ல் (தனது14 வது  வயதில்) வானொலி  கலைஞராக அறிமுகமானார்.
என்.எஸ்.எம்.ராமையா எழுதிய "விடிவெள்ளி" நாடகம்  மூலமாக தன் திறமையை  வெளிக்காட்டி இன்றும் வானொலி நாடகமோ ,மேடைநாடகமோ, எதுயாயினும்  சரியே மங்காதே  விடிவிள்ளியாகவே  திகழ்கின்றார் .
நூற்றுக்கணக்காண நாடகங்கள்  வானொலியில்  மதுரக்குரலால்
  ஒலித்து நடிப்புத்  திறன் மிளிர்ந்தது,புகழ் சேர்த்துக் கொடுத்த சில  நாடகங்களை  வாசகர்களுக்கு நினைவுப்படுத்துகிறேன்.
வாடகை விடு ,திரு.சி.சண்முகம்  எழுதிய  மேடை நாடகம்
'ஹரே ராம் ' , நரே கோபால்  எழுதிய நெஞ்சில்  நிறைந்தவள்,லண்டன் கந்தையா,ஸ்ரீ மான் கைலாசம்,தேரோட்டிமகள்,(குந்தி தேவி பாத்திரம் ) முருகையனின் "விடிவை நோக்கி"போன்ற நாடகங்களில் பல்வேறு பாத்திரங்களில் முத்திரை பதித்துப் புகழ் சேர்ந்தார்.வானொலி (ஒலிபரப்புத் துறையையும்)நாடகத் துறையையும் தன் குரல் மூலமாக (தனித்துவமாக)மிளிரச் செய்த பெருமை அம்மா இராஜேஸ்வரி அவர்களுக்கே உண்டென்றால் அது மிகை அல்ல. 26 . 12 . 1952 ம் திகதி முதல் வானொலி கலைஞராக  கலைத்துறையில் பாதம் பதித்த அம்மா இராஜேஸ்வரி 1969 இல் பகுதி நேர அறிவிப்பாளராகவும். 1971 இல் மாதர்,சிறுவர் பகுதி தயாரிப்பளராகவும்,1974 இல் நிரந்தரஅறிவிப்பாளராகவும்,1982 இல் தரம் - 1 அறிவிப்பாளராகவும் (முதல் தரம்) 1994 இல் மீ. உயர் அறிவிப்பாளராகவும் தன் முயற்சியினால் படிப்படியாக உயர்ந்தார்.நாடறிந்த நல்ல சிறந்த நாடகாசிரியர் திருவாளர் சண்முகம் அவர்களை தன் அன்புக் கணவராக இராஜேஸ்வரி பெற்றார்.இத்தம்பதினருக்கு மூன்று பிள்ளைகள்,மூத்தவர் வசந்தி சண்முகம் (தற்போது திருமதி சிவகுமார்) தாயைப் போலவே சிறுவயது முதல் வானொலியில் இசைப் பகுதியில் தயாரிப்பாளராக பணியாற்றினார்.திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளோடு பாரதத்தில் வாழ்கின்றார்.ஆண் மகன் இருவர்.எஸ்.சந்திரமோகன் பாடகர் இவர் (காலமாகி விட்டார்)  புகைப்படக் கலைஞர்.எஸ்.சந்திரகாந்தன் தனியார் வானொலியில் ஒலிபரப்புத் துறையில் பணியாற்றுகின்றார்.கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் அரச அதிகாரியாக இருந்து கொண்டு கலைப்பணி ஆற்றிய திரு சண்முகம்,தனது மனைவி இராஜேஸ்வரி அவர்களின் முன்னேற்றத்துக்கு துணை நின்றவர்.திருவாளர் சண்முகம் எழுதிய வானொலி தொடர்கள் ஏராளம்.விளையாட்டுத்துறை விமர்சனம் செய்வதிலும் அவர் வல்லவர்.அவர் எழுதிய புகழ்பெற்ற (வானொலி) நாடகங்கள் சில "துணிந்து விடு தூது,புழுகர் பொன்னையா, இரவில் கெட்ட குரல்"இப்படி இன்னும் பல.இராஜேஸ்வரி வானொலியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளோ பல.அவற்றுள் பூவும் போட்டும் மங்கையர் மஞ்சரி , முத்துவிதானம்,இசைச் சித்திரம்,சிறுவர் நிகழ்ச்சிகள்.பொதிகைத் தென்றல்,வீட்டுக்கு வீடு,இசையும் கதையும்,வானொலி மலர்,ஒலி மஞ்சரி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

1994 இல் சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருது (போட்டி இல்லாது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுத் தெரிவானமை குறிப்பிடத்தக்கது. 1995 இல் முதன் முதலாக ஈழத்துப் பெண் என்ற வகையில் (டாக்டர் புரட்சித் தலைவி விருது) "ஜெயலலிதா விருது"அம்மா  இராஜேஸ்வரி அவர்களுக்கே கிடைத்தது.கலாசார அமைச்சின் மூலம் முன்னால் அமைச்சர் செ.இராசதுரை அவர்களினால் "மொழிவளர் செல்வி" பட்டம் பெற்றார்.பிரான்ஸ் நாட்டுக்கு அழைக்கப்பட்ட இவர் பாரிஸ்,டென்மார்க்,சுவிஸ்,நோர்வே வே,ஜெர்மனி,லண்டன்,போர்லின் போன்ற இடங்களில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.சுவாமி விபுலாந்தரின் நூற்றாண்டுப் பெருவிலாவினை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மேதகு ஜே.ஆர். ஜயவர்தனா அவர்களினால் "வாகீசகலாமணி" பட்டம் பெற்றார்.அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களினால் "தொடர்பியல் வித்தகர்"பட்டம் பெற்றார்.பேராசிரியர் டாக்டர் இரா.நாகு (தமிழ்த்துறைத் தலைவர் - மாநிலக் கலூரி சென்னை)பேராசிரியர் அருட்திரு சி.மணிவண்ணன் (தேர்வு ஆணையாளர் - தூயவளனார் கல்லூரி திருச்சி)ஆகிய தமிழரிஞர்கள்  முன்னிலையில் தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலைய இயக்குனர் இளசை சுந்தரம் அவர்களினால் எட்டயபுரம் தென்பொதி தமிழ்ச்சங்கம் "வானொலிக் குயில்"பட்டம் வழங்கி கௌரவிக்கப் பெற்றார்.அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை,அட்டாளைச்சேனை,கல்முனை,சாய்ந்தமருது போன்ற இடங்களில் பாராட்டும்,தங்கப் பதக்கமும் பெற்றார்.சாய்ந்தமருது கலைக்குரல் "வான்மகள்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.11 . 11 . 2000 ஆண்டு கலைமகள் ஹிதாயா றிஸ்வி,மஸீதா புன்னியாமீன் ஆகியோர் இணைந்து எழுதிய "இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை" எனும் கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழாவின் போது சிந்தனை வட்ட பேராதனை பல்கலைகழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.தில்லைநாதன்,கலாநிதி துரை மனோகரன்,கம்ப பாரதி ஜெயராஜ் போன்றோர் முன்னிலையில் "மதுரக் குரல்" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.அம்மா  தடாகம் கலை இலக்கிய  வட்டத்தின் சார்பாக  குருநகல் தாரிகா மர்சூக் அவர்களின் மனங்களின் ஊசல்கள்  வெளிட்டு விழாவில் "கலைதீபம் விருது வழங்கி  கௌரவிக்கப்பட்டார். இதன் சிறப்பம்சம் தனது பிறா மகளாய் கலையுலகில் உலா வரச் செய்திருக்கும் கலைமகள் ஹிதாயா றிஸ்வி தனது இலக்கிய வளர்ச்சிக்கு உரமாய் இருந்த அம்மா இராஜேஸ்வரி அவர்களை கௌரவித்தது பெருமைக்குரியது.'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் - தன்மைகளை சான்றோன் எனக் கேட்ட தாய்' அடையும் பூரிப்பை போல் இந்த விருதில் பூரிப் படைவதாக கூறிப்பிட்டார்.

இராஜேஸ்வரி பட்டங்கள் பல பெற்றாலும், பெருமைகள் பல சேர்ந்தாலும்,பாராட்டுக்களை அள்ளிக் குவித்தாலும்,ஒரு சில கலைஞர்களைப் போல இவர் தடம் மாறிவிடவில்லை.அன்று போலவே இன்றும் சுமார் 50 வருடங்களுக்கு மேலான  சேவையினை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தில் செய்துள்ளார்.செய்தும் வருகின்றார்.பவளவிழா கண்ட இவர் போட்டி நிகழ்ச்சிகளை வானொலியில் நடத்தும்போது மதுரக்குரலாலும்,மொழி வளத்தாலும் தமிழ் பூக்களை தட்டுவித்துள்ளார்.தென்னகத்திலிருந்து எஸ்.பி பாலசுப்ரமணியம்,இளையராஜா,சங்கர் கணேஷ்,கல்யாணிமேனன்,எம்.எஸ்.வசந்தகுமாரி,கே.ஜே.ஜேசுதாஸ்,ஜமுனாராணி,கங்கைஅமரன்,கவிஞர் பூங்குயில்,ஜிக்கி,மலேசியா வாசுதேவன்,ரீ.எம். சௌந்தரராஜன்,எஸ்.பி.சைலஜா,அசோகன்,வாணி ஜெயராம்,குட்டி பத்மினி,எஸ்.பி.முத்துராமன்,எஸ்.வி.சேகர்,கமல்ஹசன், மனோராமா,பி.சுசிலா,வாலி,ஸ்ரீகாந்த்,ஜென்சி போன்ற பலரை(புகழ் பூத்த எத்தனையோ கலைஞர்களை) வானொலியூடாகப் பேட்டி கண்டுள்ளார்.கவிஞர் வைரமுத்து இந்த வானொலிக் குயிலை பற்றி இப்படி கூறுகின்றார்.
 

வசந்தத்தில் குயில் கூவுமாம்
இந்த வானொலிக் குயிலுக்கு
வருடமெல்லாம் வசந்தமாம் என்று!
வீசும் திசைகளை காற்றுக்குப் பெயரிட்டான் தமிழன்....

வடக்கே இருந்து வருவது வாடைக்காற்று
மேற்கே இருந்து வருவது கோடைக்காற்று
கிழக்கே இருந்து வருவது கொண்டல் காற்று
தெற்கே இருந்து வருவது தென்றல் காற்று

எங்களுக்கு தெற்கேயிருந்து வீசுகிற நீங்கள் தென்றலாகத்தானே இருக்க முடியும்.இது அர்த்தமுள்ள தென்றல்,ஆனந்தத் தென்றல்,பருவம் கடந்து வீசும் பைந்தமிழ் தென்றல்.






இப்படிக் கவிஞர் வைரமுத்து சென்னையிலிருந்து அனுப்பிய மடலில் போற்றி புகழ் பாடியுள்ளார். இலட்சக் கணக்கான,மில்லியன் கணக்கான தமிழ் பேசும் உலக நேய நெஞ்சங்களில் நீங்காத இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ள அம்மா இராஜேஸ்வரி சண்முகம் வானொலி நேயர்களின் ஒரு சொத்து.எனினும் இதே போலவே நல்லிதயமுடன் உடலாலும்,உளத்தாலும்,குரலாலும் இளமையாய் இறவாப் புகழ் பெற்று பல்லாண்டு காலம் வாழ  இதயத் தூய்மையுடன் வாழ்த்துகின்றேன். 





சனி, 15 அக்டோபர், 2011

கலைமகள் ஹிதாயா றிஸ்வி

கிழக்கின் சொத்து கலைமகள் ஹிதாயா றிஸ்வி
                     பேராசிரியர்  க ...அருணாசலம் :தமிழ்த்துரை பேராதனைப் பல்கலைக்கழகம்.....கவிஞர் அஸ்மின்,..!

தென்றலே கவிபாடும் தென்கிழக்கு  மண்ணின் கிராமம் ஒன்றின் தெருக்கோடியில் நின்று கொண்டு கூழான் கல்லொன்றை கூலிக்கெடுத்தாவது விழிகளை மூடிக் கொண்டு வீசினால் விர்ரென்று விரைந்தேகும் அக்  கல்  விழும் இடம் ஒரு கவிஞனின் வீடாக இருக்கும் இல்லாவிட்டால் ஒரு எழுத்தாளனின் தலையாக இருக்கும்.
கன்னித் தமிழின் கழுத்துக்கு கனகமணி மாலையிட்டு விண்ணுலகம் விரைந்திட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்த அடிகளார்.அவர் அன்புச் சீடன் ஆசுகவி புலவர்மணி ஆ.மூ.சரிபுதீன் போன்ற ஆன்றோர்களும் ;வாடிநிற்கும் பயிராய்,வாழ்வோடிந்த உயிராய்,வரண்டு போன நதியாய் கிடந்த ஈழத்து இலக்கியத்தை வளப்படுத்தி வாகை சூடிய சான்றோர்களும் பிறந்து சரித்திரம் படைத்த மண் தென் கிழக்கு மண்.அம் மண்ணில் நீலாவணன்,யுவன்,பாண்டியூரான்,
எம்.ஏ. நூஃமான்,மருதூர் கொத்தன்,அ.ஸ.அப்துல் ஸமது ,அன்பு முகைதீன்,எம்.எச்.எம் அஷ்ரப்,மருதூர்க்கனி,ஜின்னா ஷரிபுத்தீன்,ஆஷாத் மௌலானா.சோலைக்கிளி,பொத்துவில் ஏ.மஜீத்,ஏ.இக்பால்,பாவலர் பஸீல் காரியப்பர்,கவிவாணன்,கலையன்பன் அஸீஸ்,முத்து மீரான்,மருதூர் ஏ.மஜீத்,ஏ.ஆர்.எம்.சலீம்,மருதூர்வாணர் ஈழமேகம,ஈழக் குயில் இத்ரீஸ்,அக்கரையூர் அப்துல் குத்தூஸ்,எஸ்.ரபீக்,அக்கரை மாணிக்கம்,அன்புடீன்,பாலமுனை பாரூக்,ஒலுவில் அமுதன்,கவிஞர் அஸ்மின்,.....என்று உலக அதிசயமான சீனச்சுவர் போன்று இற்றைவரை நீண்டு செல்லும்..!

வைரக்கற்களோடு வைரக்கல்லாக தன்னையும் பதித்துக் கொண்ட பெண் படைப்பாளி தான் கலைமகள் ஹிதாயா றிஸ்வி..

இணையத்தில் ஒரு கவிதை இடம் பெற்றால் 'நோபல்'பரிசு 'லெவலுக்கு'கூத்தாடும் சில படைப்பாளிகள் தம் கவிதை மக்கள் இதயங்களில் இடம் பிடித்திருக்கின்றதா ..?என்று ஒரு போதும் எண்ணிப் பார்ப்பதில்லை.!எழுதப்படுவதால் மட்டும் எந்தப் படைப்பும் வாழாது.எண்ணற்றவர்களால் படிக்கப்படுவதாலும் எண்ணங்களில் பதிக்கப்படுவதாலுமே அப்படைப்பு என்றென்றும் ஜெயம் பெற்று ஜீவிக்கும்..!
அதனால்,அப்படைப்பாளியின் பெயரும் முழுநிலவாய் பிரகாசிக்கும்..

கவிதைக்கு அனுபவம் வானத்திலிருந்து மழையாய் பொழிவதில்லை.வாழ்க்கையில் இருந்து தான் அது கிடைக்கிறது என்ற கருத்துக்களோடு கைகுலுக்கிக் கொள்ளும் இவர்,ஈழத்துப் பெண் படைப்பாளிகள் வரிசையில் தன்னையும் ஒருவராக நிலைநிறுத்திக் கொண்டவர்..!
ஈழத்து இலக்கியத்தை கொத்திச் செதுக்கி  அழகு படுத்தியதில் முஸ்லிம் பெண் படைப்பாளிகளின் பங்கும் அளப்பரியது.ஆனால் பெண் படைப்பாளிகளின் பங்கோ அரிதானது.ஆங்காங்கே தொட்டம் தொட்டமாக எழுந்த சில பெண் படைப்பாளிகள் தோல்விகளையெல்லாம் தோற்கடித்து எழுவான் கதிர்களாய் எழுந்து வந்திருப்பது  சாதனைக்குரியதே..!

  அம்பாறை மாவட்டம் சாய்ந்த மருதுவில் வைத்திய  கலா நிதி  யூ.எல் ஏ.மஜீத் : ஜைனபமஜீத்
  தம்பதிகளின்  ஐந்தாவது பிள்ளையாக பிறந்தார் .  ஹிதாயா  ஏ.மஜீத்என்ற  இயற் பெயர் கொண்டவர்.

  நாடறிந்த  வீ ர்ருந்த  இந்த பெண் கவிஞர் : தான் கற்கும் காலத்திலிருந்தே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டிருந் தார்.  இவரின் கன்னி கவிதை (புதுக்கவிதை) 1982-04-01 ம் திகதி 'மீண்டும்'எனும் தலைப்பில் தினகரனிலும்,அதேதினம்'சிந்தாமணி'பத்திரிகையில்'அன்னை'எனும் தலைப்பில் மரபுக்கவிதையும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்...!

ஆரம்பதிற் கவிதையுலகிற்  கால் பதிக்கத் தொடங்கியவர் தெவிட்டாத  தீந்தமிழை   மரபு  ரசனை கெடாமல் கவிதைகளில்  நளினமாக எடுததாளும்   ஹிதாயா :  அடக்காமான  சுபாவம் கொண்டவர் .! கவிதா  வெறி  கொண்ட  உணர்ச்சிக் கவிஞர் என்பதே  பொறுத்தமாகும்.
 இவரது கனதிமிக்க படைப்புக்கள்  இலங்கையின் அனைத்து இதழ்களிலும்  உலா வரும்  கலைமகள் ஹிதாயா:  நிஷா : மருது :நஹி : எனும் புனைப் பெயரிலும்  எழுதி வருகிறார்.
அன்றிலிருந்து  இன்றுவரை மூன்று தசாப்தகாலமாக மரபுக்கவிதை : புதுக்கவிதை: சிறுகதை :விமர்சனம் :கட்டுரை :மெல்லிசைப்பாடல்கள் : வானொலி நாடகங்கள் :என்று  எத்துறையிலும்   முத்திரை  பதித்து  வருகிறார் ...!
இவரதுகனமிக்க்  படைப்புக்கள்
 இந்தியாவிலிருந்து வெளி வரும்  சமரசம்:கதவு சஞ்சிகைகளிலும்  வெளிவந்துள்ளன
பல்வேறு சமூகசேவை,இலக்கிய மன்றங்களில் அங்கத்துவம் வகிப்பதோடு மலேசியாவிலுள்ள உலகத்தமிழ் கவிஞர் பேரவையிலும் முக்கிய இடத்தையும் வகிக்கின்றார்
.இலங்கை வானொலியில் பல நிகழ்சிகளிலும் குரல் கொடுத்துள்ள இவர்
ரூபவாஹினிக்கவியரங்கிலும் முதன்முதலில் பங்குகொண்ட முஸ்லிம்பெண் என்ற பெருமையைத் தட்டிக் கொண்டவர்
,அத்துடன் இலங்கை வானொலி மாதர் மஜ்லிஸ் பிரதித் தயாரிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.
  இவரது இலக்கியப் பனியின் முக்கிய கட்டமாக 'தடாகம்'
இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டமையைக் குறிப்படலாம்.ஒரு பெண்ணாக இருந்த போதிலும்  கூட 12  இதழ்களை இவர் வெளிக் கொண்டு வந்தார்.

 இவ் இதழ்களில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா,ஸீ.எல்.பிரேமினி,பேராசிரியர் சு.வித்தியானந்தன்,ஏ.யூ.எம்.ஏ .கரீம்,கல்ஹின்னை ஹலீம்தீன்,புன்னியாமீன் ஆகியோரின் புகைப் படங்களை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்துள்ளார்.
.சில நூல்களின் வெளியீட்டு விழாக்களை  கண்டி : குருநாகல்  போன்ற இடங்களிலும் நடத்தியுள்ளார்.
.இவர் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்தாலும்   கொழும்பு-வெள்ளவத்தை  ஹோட்டல்  சபயாரில்  இலங்கை  வானொலி  அறிவிப்பாளர் நாகபூஷணி கருப்பையா எழுதிய 'நெற்றிக்கண்'கவி நூலை வெளியீட்டு  சாதனை படைத்தார்.ஒரு முஸ்லிம் பெண் எழுத்தாளர் என்ற வகையில் இவரின் பணி பாராட்டத்தக்கது.
.         கல்வித் தகமை ...
ஆரம்பக்கல்வியை முஸ்லிம் பெண்கள் கல்லூரி
யில்(ஆங்கிலப் பிரிவிலும்):உயர் கல்வியை  கல்எளிய முஸ்லிம்  பெண்கள் அரபீக் கலா  பீத்தில்  (அரபுமொழியிலும்)).கற்றார் .தமிழ்மொழியில்  இவர்  கல்வியை  தொடர வில்லை  என்பது  குறிப்பிடதக்கது .
.இவர்  வெகுசனதொடர்புசாதன டிப்ளோமாவையும் பூர்த்திசெய்துள்ளார்.
       நூல்கள்...
1985   ல்"நாளையும் வரும்" புதுக் கவிதை  நூலை  த
ந்தார்.
 
2000 ல் சிந்தனை வட்டத்தின்   வெளியீடாக  (தேன் மலர்கள்) மரபுக் கவிதை நூலை  தந்தார் .(இது இலங்கையில் ஒரு  முஸ்லிம்  பெண் கவிஞர் வெளியிட்ட முதலாவது   தொகுதி இதுவாகும் ...)
அத்துடன்   "இரட்டைத்  தாய்யின் ஒற்றைக் குழந்தை" புதுக் கவிதை  நூலை  கவிஞர்  மஸீதா புன்னியாமீனுடன்  இணைந்து 2000  ஆண்டில் வெளியிட்டுள்ளார்  அடுத்த நூல்இரண்டு கிழக்கு  மாகான பெண் கவிஞர்களுடன் இணைந்து விரைவில் வெளியிடவுள்ளார்.!
 இலங்கையில் வெளியான  பாலங்கள்:எழுவான் கதிர்கள் : புதிய மொட்டுக்கள் :  மனிமலர்கள்: புதிய பூக்கள்  போன்ற பல   தொகுதிகளிலும்  இவரது கவிதைகள் இடம்  பெற்றுள்ளன.
  இவரது தரமான  கவிதைகள் பல [அல் பஸீர்  அகமட் அல் அன்சாரி _அல்  காதிரி  அவர்களால்  அரபு  மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோடு :பேராசிரியர்  க ...அருணாசலம் (தமிழ்த்துரை:பேராதனைப் பல்கலைக்கழகம்)  அவர்களது  மலையக  இலக்கிய ஆய்விலும்  உள்ளடங்கப் பெற்றுள்ளது...!
தென்கிழக்குபல்கலைகழக தமிழ்துறை மாணவி நிந்தவூர் ஆசிரியை ரிஸ்லா அவர்களாலும்,கிழக்குபல்கலைகழக தமிழ்துறை மாணவ ஆசிரியர் முபாரக் அவர்களாலும் ஆய்வுசெய்து ஆய்வேடு சமர்பித்துள்ளனர்...
இவரது இரண்டு கவிதை நூல்கள் இந்தியாவில் பேராசிரியர் அக்னி புத்திரன் அவர்களால் சிபாரிசு செய்யப்பட்டு பல்கலைக் கழக மட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது
 இலங்கை  அரசின் இலவச  பாடப்  புத்தகமான (தமிழ்  மொழியும்  இலக்கியமும் ) தரம்  9 நூலில் இவரது "வாழும் வழி"எனும்  கவிதை  இடம்  பெற்றுள்ளது..!
 ஈழ
த்து  இலக்கிய  வரலாற்றில்  இது  ஒரு  பெண்  படைப்பாளிக்குகிடைத்த மகத்தான  பரிசாகும் ...!
விருதுகள்...
இவர் கலை  இலக்கிய  உலகில் சிறகு கட்டிப் பறப்பதற்கு இவருக்கு கிடைத்த பரிசுக்க விருதுகள்  ஊ க்கம் கொடுத்து ள்ளன .
1985ல்  தேசிய இளை
ர் சேவை  மன்றத்தினால்  அகில இலங்கை  ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப்  போட்டியில்  மு தலாமிடம்  பெற்றமைக்காக  ஜனாதிபதியின் விருதும் : சான்றிதழும் பெற்றிருக்கிறார்  .
1999 ஆம் ஆண்டடில் "ரத்னதீபம்"  சிறப்பு விருது  பெற்றுக்  கொ
ண்ட முஸ்லிம்  பெண் கவிர்  இவர் .!2002 ஆம் ஆண்டு  இலங்கை முஸ்லிம்  அமைச்சின்  அனுச   னையுடன்  நடாத்தப்பட்ட  உலக இஸ்லாமிய  தமிழ்  இலக்கிய  மா நாட்டில் இளம்  படைப்பாளிக்கான விருது வழங்கிகௌரவப் பட்டவர்களில்  இவரும்  ஒருவர்.!
.2007 ஆம் ஆண்டு உயன்வத்தையில்  நடைபெற்ற இலக்கிய விழாவில்  'கலையரசு'பட்டம் வழங்கி  கௌரவிகப்பட்டார
2011 லக்ஸ்டோ     கலை  இலக்கிய  சமூக    அபிவிருத்தி  நிறுவனத்தால் ;(மருத மணி)
''கலை முத்து ''பட்டங்கள்  வழங்கி  கௌரவிகப்பட்டார் ..
அல்-ஹாஜ்  எம் . ஆர். எம் . றிஸ்வி அவர்களின்  மனைவியான
இவர் குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெலயில்   வசித்து வருகின்றார்
.மிக விரைவில் 'விடியும் வானம்' எனும் சிறுகதை நூலை வெளியிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கவித்துவ  வீரும் : கருத்து வீச்சும் ;ஆழ்ந்தகன்ற மூகப்  பார்வையும்  கொண்ட  கவிதைகள்  கதைகள்  பலவற்றை  மேலும் தந்து ஈழத்து  தமிழ்  கலையுலகிற்கு  வளம்  சேர்ப்பார்  என  நம்புகிறோம். 
 

எனது ஏனையத் தளங்கள்...


என்னை தொடர்பு கொள்ள விரும்புவோர்கள்!


"kalaimahel hidaya risvi"
No:-677.Ahamed road,
sainthamaruthu-14
(E.P).
Srilanka..
tele phone:-94-077-7473723
e-mail:-s.k.risvi@gmail.com,
inulhidaya@gmail.com,
inulhidaya@ymail.com.
Face book address:-Kalaimahel hidaya risvi
Skype address:-mohemedrislan