வியாழன், 9 ஜூன், 2011

நூல்: மூடு திரை (சிறு கதை தொகுதி) ஆசிரியர்: மஸீதா புன்னியாமீன் நூல்ஆய்வு : கலைமகள்ஹிதாயாறிஸ்வி

வானைத் தொட்டு விட வேண்வாக் கொண்டுவளர்ந்த மலைகள், அதில் தங்கி களைப பாற்றிக் கொள்ளும் வெண் பஞ்சு முகில்கள்,பொன் வண்ண மழை மங்கையின் மேனியெங்கும் போர்த்தியிருக்கும்,தேயிலைப் பசும் பட்டாடைகள் தாயின் மார்பில் ஊறிச் சுரக்கும் ஜீவ அமுதம் போல் மழை மாதாவின் இதயத்தில் ஊறிச் சுரந்து ஓசையிட்டுப் பாடி வரும் குளிர் நீர் அருவிகள்.இயற்கையும்,செயற்கையும் இணைந்து கை கோர்த்து களி நடம் புரியும் கவின் மிகு காட்சிகள்.இந்த அழகு ஓவியம் நிறைந்த மலையகத்தை வசிப்பிடமாக கொண்டவர் மஸீதா புன்னியாமீன். காலி கட்டுக் கொடையை பிறப்பிடமாக கொண்டவர்.கணித விஞ்ஞான ஆசிரியையான இவர் 80 காலப் பகுதியில் கலையுலகில் பிரசித்தார்.இலங்கையிலுள்ள முஸ்லிம் எழுத்ததாளர்களை விரல் விட்டு எண்ணும்போது இவரும் ஒருவர்.அழகான பார்வையும்,அறிவுக் கூர்மையும்கொண்ட ஆளுமைமிக்க எழுத்தாளராய்,கவிஞராய் தன் ஆற்றலை அகலப்படுத்திக் கொண்ட இவரது கவிதைகளும் கதைகளும் காத்திரமான கருத்தாலமிக்கது.சமுதாயத்தின் சரிவுகளும் சஞ்சனங்களும் இவரது கதைகளில் நிறைந்து காணப்படும்.பெண்ணியத்தை கண்ணியமாய் மதிக்கத் தெரியாத காட்டு மிராண்டித் தனம்,காடைத்தனம்,சமுதாய அடக்கு முறை,ஒடுக்கு முறை ஆகியவற்றிற்குத் தீர்வு காணும் பாங்கில்,இவரது கதை போக்கு சரிவில்லாமல் வளர்ந்து செல்லும்."நாளைய சந்ததியின் இன்றைய சக்தி"என்ற இலச்சினையோடும்,இலட்சியத்தோடும் இடையுறது உழைத்து வரும் "சிந்தனை வட்டத்தின்"298 வது வெளியீடாக மஸீதா புன்னியாமீனின் "மூடு திரை"எனும் சிறுகதைத் தொகுதி.இந்த தொகுதியில் 09 சிறுகதைகள் மாத்திரமே இடம் பெறுகின்றன. அவற்றில்,"நிலவுக்கொரு மூடுதிரை"எண்ணும் தலைப்பிலான சிறுகதை,விதவை சமீராவின் விசும்பலை,விரக்தியை வெளிப்படுத்தி நிற்கின்றது.வாழாவெட்டியாய் வயிற்றுப்பாட்டுக்குவழி தேடியவாறு வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் வனிதையரின் வாழ்க்கைச் சவடால்கள் கதைக் கருவாய் சுட்டப்படுகின்றன.
".........அந்திப்பட்டா ஊட்டோட வாசலோட அடங்கியிருக்காம,எங்க போய் தொலஞ்சண்டு......கேட்டன்.கண்ட கண்ட கழுதயெல்லாம் ஒண்ட உம்மா எப்படி ஈக்கா என்று சாட கேக்கிறானுவள்.வாப்பா இல்லாமப் போனபொறவு நீங்க முந்தி மாதிரி இல்ல...இப்ப..."
மண்வாசனை சொற்களோடு கூடிய இக்கதை,விதவைகளுக்கு மறுமணம் அவசியம் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது."கறைகளும் கரைகளும்"என்னும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் மனதைத் தொடுகின்றன.தளர்ச்சி கண்டு தள்ளாடும் தந்தையைத் தணியாத தாட்சணியத்தொடு தாபரிக்கும் தனயன்,அவனது அன்புக்கு அடிமையாகி,அடக்கவொடுக்கமாய் மாமனாரை மதித்து மரியாதை செய்யும் மனைவி -மக்கள் என,படைக்கப்பட்ட கதா பாத்திரங்கள் ஒரு குடும்பத்தில் இருந்தால்,அதுவே பெரும் மன நிறைவைத் தரும்."நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்"என்பதற்கு இந்தக் கதை அழுத்தம் கொடுக்கின்றது.கதாசிரியை மஸிதா புன்னியாமீன்,சுனாமிப் பேரலைச் சூறையாடலையும் சொந்த வாழ்வில் கண்டு,சொந்த பந்தங்களை இழந்து சொகித்த்தவர்.அந்த அனுபவத்தின் அவதிப்பாட்டை அவர் "முகவரியில்லா முகம் "என்ற கதையில் வேதனை விசும்பலோடு வெளிப்படுத்தியுள்ளார்.காலி மாவட்டக் கட்டுக் கொடைக் கடற்கரை உறவினரைக் காவு கொண்ட உண்மைச் சம்பவத்தை அக்கதையில் நாம் காணலாம்."துருவங்கள்"என்னும் கதையில்,இரு வேறு கதாபாத்திரங்கள் கொள்கை ரீதியாக வேறுபட்டு நிற்கின்றன.அளவோடு குழந்தைகளைப் பெற்று,வளமோடு வாழ வேண்டுமென எண்ணும் தாய் ஒரு புறம்."இறைவன் தருகிறான்.நாங்கள் பெறுகிறோம்....."என்ற வீறாப்புடன் வாயாடி அளவுக்கதிகமாகக் குழந்தைகளைப் பெற்று,பேணி வளர்க்க தெரியாத தாய் ஒரு புறம்.இரு சாராரும் வெவ்வேறு துருவங்கள் என்பதைக் கதாசிரியர் சுட்டியுள்ளார்.உருவம்,உள்ளடக்கம்,உத்திமுறை அனைத்தும் ஒவ்வொரு கதையிலும் உள்ளத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றன.மஸீதா புன்னியாமீன் படைத்த சிறுகதைகளில்,நீதி,நியாயம்,நேர்மை நிறைந்த நியம வாழ்வை நாம் தரிசிக்க முடிகின்றது."நெருடல்கள்"என்னும் தலைப்பில் அமைந்த கதை வேலைக்கமர்த்தப்பட்ட ஏழைச் சிறுவனைப் பற்றியது.அச்சிறுவன் வீட்டுக்காரியல் ஏச்சுப் பேச்சுக்களால் துன்புறுத்தப் படும் போது,அவளின் மகள்,அந்த "எத்தின்"மீது கழிவிரக்கங்கொண்டு தாயைக் கண்டிக்கின்றாள்;உழைக்கும் வர்த்தகத்துக்கு உதவிக் கரம் நீட்டும் உயர்ந்த மனம் படித்தவளாய் விளங்குகிறாள்.உழைக்கும் வர்க்கத்தை உதாசீனப்படுத்தாமல்,ஒறுத்து நோக்காமல்,உயர்வை என்ன வேண்டும்;என்ற உயர்ந்த மனப்பாங்கை "சுகமாகிப் போன சுமை"என்ற கதை மூலம் சுட்டிக் காட்டியுள்ளார் மஸீதா புன்னியாமீன் .கதையில் வரும் கதாப்பாத்திரமான கபீர் மாஸ்டர்,தனது அந்திமகாலத்தில் தனக்குரிய வீடு வாசலை நாகூர் பிச்சை என்ற தனது அடிமைக்கு உரித்துடையதாய் உறுதி முடித்து வைக்கிறார்.அவரது மக்கள் தந்தையின் உயர்வான எண்ணத்தை மதித்து,அந்த வேலைக்காரனை உறவுக்காரனாய் அணைத்துக் கொள்கின்றார்கள்.இவ்வாறு,ஒவ்வொரு கதையும் ஒழுக்க மேம்பாட்டையும்,ஒப்ப செப்பமான உயர்ந்த வாழ்க்கைப் போக்கையுமே வலியுறுத்தி நிற்கின்றன.சிறந்த சிறுகதைத் தளத்திற்குச் சோடினை தேவை இல்லை;சுற்றி வளைத்துச் செல்லும் சாகசம் தேவையில்லை.சுவைஞனின் சுவைப்புலத்தைச் சுவீகரித்துக் கொள்ளும் சொல்லாட்சி மட்டும் இருந்தாற் போதும்.இந்த இலாவணியமும்,இரசனையும் இழையோடியணவாய் தோப்பில் மீரான்,சுஜாதா முதலானோரின் கதைகளில் அந்த அழகை நான் கண்டு மகிழ்கின்றேன்."கரும்புள்ளிகள்"என்னும் தலைப்பில் அமைந்த கதைக் கரு இதற்கு நிதர் சமனாகும்.மானிடத் தளம்பல்கள்,மனக்குழப்பங்கள்,மானிதப் பண்புகள் முதலானவற்றைக் கதாசிரியர்கள் கற்பனையில் படைக்கும் போது கையாளும் உத்தி முறைமை ஆளுக்காள் வேறுபடுவதை நாம் காணலாம்.கதாபாத்திரக் கூற்றாக வெளிப்படுவான இன்னும் சில.இந்த இருமுகத் தன்மையும் மஸீதா புன்னியாமீன் கதைகளில் வெளிப்படுவதை நாம் காணலாம்.சோடை போகாத சுவைத் தன்மை இவரது கதைகளில் நிறைந்துள்ளன.அவரது ஆற்றல் முக்கையுச் சிறைக்குள் மூடுண்டு போகாமல்,முகத்திரைக்குள் முடங்கிவிடாமல் முகதரிசனம் தர வேண்டுமென முழுமனதாய் வேண்டுகின்றேன்.
இதயம் பிழிந்து வாழ்த்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக