இலங்கையின் இன்றைய தமிழ் இலக்கியப் பரப்பினை நாம் அவதானிக்கும் போது கலை இலக்கியப் படைப்பாளர்களின் பெருக்கம் (தொகையளவில்) மிக...மிக... குறைந்து கொண்டே செல்வதை அவதானிக்கலாம்.
அதே நேரம் கடந்த 70 தொடக்கம் 85 வரையிலான காலகட்டத்தில் படைப்பாளிகளின் தொகை அதிகளவு அதிகரித்துச் சென்றமையை நாம் மறந்து விட முடியாது.
அன்று இருந்த கலை இலக்கிய துடிப்புக்கும், இன்றுள்ள கலை இலக்கிய துடிப்புக்கும் எவ்வளவோ வித்தியாசம். அன்று இலக்கியமே இலட்சியமாய்,இலட்சியமே இலக்கியமாய் இருந்தது.
பல பத்திரிகைகள் போட்டிபோட்டுக்கொண்டு இளம் படைப்பாளர்களது வளர்ச்சிக்கு களம் அமைத்துக் கொடுத்தன. இலங்கையின் பல இடங்களில் இருந்தும் சஞ்சிகைகளின் வரவு அதிகரித்துக் கொண்டே இருந்தன.
ஆனால் இன்று எவ்வளவோ வித்தியாசமாக மாறிப் போயுள்ளதை உணர்கின்றோம்.வாசிப்புத்தன்மை எம் மத்தியில் குறைந்து கொண்டே செல்கின்றது.சின்னத்திரைகளில் ,படங்களையும்,நாடகங்களையும் இன்று பார்ப்பதில் காலமும் நேரமும் செல்கின்றது.
அன்றைய தரமான கவிஞர்களும் ,சஞ்சிகைகளும் இன்று எங்கே?
இன்று வளரத்துடிக்கும் கலையுள்ளங்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் ஊடகங்களும் ,கலை இலக்கிய பிரசுரங்களும் மிகமிகக் குறைவாகவே காணப்படுகின்றன.வளரத் தகுதியானவர்கள் கூட வித்திலே சிலரால் தோண்டப்படுகின்றனர்.நாமங்களைக் கொண்டு தரமானப் படைப்புக்கள் கூட சில தீய சக்திக ளினால் புதைக்கப்படுகின்றன.இதனால் புதிய தலைமுறையினருக்கு களம் அழிக்கப்படுகின்றது.
இந்திய கலைஞர்களான வைரமுத்து ,மு.மேத்தா,அப்துல் ரஹ்மான் போன்றோர்களது நூல்களுக்கு கொடுக்கும் வரவேற்பு ஏன் இலங்கை கவிஞர்களது எம் தேசத்தில் கிடைப்பதில்லை ஏன் அவர்களுக்கு நேசக் கரம் நீட்டுவதில்லை!
இலக்கியத் தாகம் எம் மண்ணில் வற்றிவிடக் கூடாது! அழிந்து வரும் மொழிகளில் எம் தமிழ் மொழி தொலைந்து விடக் கூடாது.இதை எம் மண்ணில் வாழும் கலை உள்ளங்கள் உணர வேண்டும்.சில தரமான கலை உள்ளங்களை இன்றைய சூழ்நிலைகளில் "சிந்தனை வட்டம் " இனம் கண்டு அவர்களது படைப்புக்களை முடிந்தளவு நூல்களாக வெளியிட்டு வருவதையிட்டு நாம் சந்தோசப்படுவதுடன் உதவிக் கரங்களையும் நீட்ட வேண்டும்.இந்த வகையில் இலங்கையில் கூடியளவு நூல்களை வெளியிட்டு வரும் "சிந்தனை வட்டம்"மலையக மண்ணில் பிறந்த மாரிமுத்து சிவக்குமாரின் மலையகச் சுவடுகள் எனும் கவி நூல் சிந்தனை வட்டத்தின் 204 வது வெளியீடாக மாரிமுத்து சிவக்குமாரின் முதலாவது கவிதைத் தொகுதி வெளி வந்துள்ளது.ஆம் மலையக கலை இலக்கிய படைபாளர்களின் வரிசையில் அமரர்கள் ,க. ப.லிங்கதாசன் ,குறிஞ்சி தென்னவன்,மற்றும் ஹலிம்தீன் ,பண்ணாமத்து கவிராயர் போன்ற பல கவிஞர்கள் தரமான கவிதைகள் மூலம் குரல் கொடுத்துள்ளார்கள்.அவர்களது வரிசையில் ஓர் வாரிசாக சிவக்குமாரை சேர்க்கலாம்.ஆம் மாரிமுத்து சிவக்குமாரின் கவிதைகளில் சமூக நோக்கும்,இன,மொழி,மத,பேத மற்ற மானிட நேயமும் வெவ்வேறு வகைகளில் கவிதைகள் முழுவதும் இழையோடி நிற்பதை அவதானிக்கலாம்.
அவ்வப்போது தினசரிகளிலும் ,சஞ்சிகைகளிலும் ,மலர்களிலும் வெளிவந்த கவிதைகள் பல இத்தொகுதியில் அடக்கப்பட்டுள்ளன.எமது நாட்டிலும் ,அப்பாலும் தான் பிறந்த மண்ணிலும் இடம் பெற்று வந்துள்ள நிகழ்வுகளின் ஒரு வெட்டுமுகத் தோற்றமாக இந்நூலிலுள்ள கவிதைகள் விளங்குகின்றன.சிவக்குமாரின் கவிதைகளில் முதிர்ச்சித்தன்மையினைக் காண முடிகின்றது.சமூக அவலங்களையும் ,மூடநம்பிக்கைகளையும் ஒரு தேர்ச்சி பெற்ற திரைப்பட இயக்குனரைப் போல கவிதைவடிவில் படம் பிடித்துக் காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளார்.கவிஞர் தாம் வாழும்,தாம் காணும், தாம் அனுபவிக்கும் மலையகத்தை அப்படியே வாசகர் முன் நிறுத்துவதற்குத் தமது கவிதைகள் மூலம் முயற்சிக்கிறார்.மலையகத்தின் சோக வாழ்வியலைத் தமது கவிதைகள் தோறும் படம் பிடிக்க முனைந்துள்ளார்.மலையகம் எதிர் காலத்தில் புதுமைகளை ,மாற்றங்களைக் காண வேண்டும்.என்ற தமது தணியாத தாகத்தையும் கவிதைகள் மூலம் வெளிப்படுத்துகின்றார்.மலையகத்தைப் பாதிக்கும் விடயங்களை விட்டொழிக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார். மலையகம் தொடர்பான பல கவிதைகள் இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் ஆத்மாவையே அழித்தொழிக்கும் முறையில் நீண்ட காலம் நிலை பெற்று வந்த போர்,எண்ணிறைந்த உடல் அழிவுகளையும்,உடமை அழிவுகளையும்,உள அழிவுகளையும், ஏற்படுத்தியது.இப்போது போர் ஓய்ந்துள்ள போதிலும் போர் அபாயம் இன்னும் நீங்கிட வில்லை.என்றைக்கும் 'போர் வேண்டாம்' என்று தான் மனிதாபிமான இதயங்கள் அனைத்தும் கருதுகின்றன.கவிஞனின் வகையில் கவிஞர் சிவகுமாரும் யுத்தத்தைப் புறக்கணிப்பதில் ஆச்சிரியப்படுவதற்கில்லை.' யுத்தத்தைப் புதைப்போம் ' என்ற கவிதையில் தனது மனிதாபிமான உணர்வை அவர் புலப்படுத்துகிறார். கவிஞர் மலையகத்தில் பிறந்தவர் என்பதால் இக் கவிதைத் தொகுதியில் கணிசமானவை மலையகத் தொழிலாளர்கள் , மலையகத்து அவலங்கள் பற்றியவையே! மானுட நேயம் மிக்க எந்த ஒரு கவிஞனையும் ,தம்மால் ஈர்க்கத்தக்க அளவிற்குத் துன்பக் கேணிகளாகவும் ,அவலங்கள்,சோகங்கள்,சோதனைகள்,வேதனைகள் முதலியவற்றின் மொத்த உருவங்களாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மலையகத் தொழிலாளர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மாரிமுத்து சிவகுமார் தன் கவிதைகளை உருக்கமாக மனம் திறந்து தந்துள்ளார்.
லயத்துச் சிறைகள் கவிதையில்,
சிறைகளில் வாழும்
கைதிகளைப் போல்,
எங்கள் வாழ்க்கையின்
உரிமைகளை எல்லாம் -இந்த
லயச்சிறைக்குள்ளேயே வைத்து
கவ்வாத்து வெட்டுகின்றனர் !
மனத்துயரம் கவிதையில் தெரிகின்றது மனம் வெதும்பிப் பாடியுள்ளத்தையும் நாம் மனங்கொள்ளல் வேண்டும்.உதாரணத்திற்குச் சிலவற்றை காணலாம்.
மலைச்சுவடுகளும் கவிதையில்
உழைப்பின் ஏணிகள்தான்
எங்களது
கருவறைகள்
அந்த ஏணியே
ஊனமாகும் போது
எங்கள் உருவங்கள்.
எப்படி முழுமை பெறும்....?
இல்லாத உரிமையெல்லாம் எந்நாளில் மீண்டிடுமோ....?
எனும் இன்னொரு கவிதையில்,
வாழ்வதுவோ
ஒரு கூடை கொழுந்துக்குள்ளே
சாய்வதற்கோ இடமில்லை.
லயத்துக்குள்ளே....
வீழும்வரை விதியின்பாதையிலே
நடந்து செல்ல
மிரட்டி மிரட்டி
ஓரங்கட்டபலபேர்.
இப்படி மாரிமுத்து சிவகுமாரின் பல கவிதைகள் துயரத்தை தருகின்றன.
முடிவாக;
ஆழமான ,சமூக பார்வை மிக்க,முழு மனிதயினத்தை யோசிக்கத் தூண்டும் கருத்துக்களை இவரது அனுபவம் நிச்சயமாக பலருக்கும் கற்றுக் கொடுக்கும் நல்ல பல தரமான கவிதைகளை இவரிடமிருந்து நான் மேலும் எதிர்பார்க்கிறேன். "மலைச் சுவடுகள்" என்ற இக்கவிதைத் தொகுதி மாரிமுத்து சிவகுமாரின் ஆரோக்கிய வளர்ச்சியினைக் காட்டுமென்று நம்புகின்றேன். கவித்துவ வீறும். கருத்து வீச்சும் ஆழ்ந்த சமூகப் பார்வையும் கொண்ட கவிதைகள் பலவற்றை மேலும் தந்து ஈழத்துத் தமிழ்க் கலையுலகிற்கு வளம் சேர்ப்பார் என நம்புகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக