ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

ஒரு நற் செய்தி




தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பின்
ஒரு நற் செய்தி


இலங்கை மண்ணில் எந்தப் பாகமாக இருந்தாலும் சரி எமது பெண்கள் அமைப்பு குடி நீரால் கஷ்டப் படுபவர்களுக்கு உதவ காத்திருக்கின்றோம்
எனவே யாராவது கிணறு கட்டிக் கொடுப்பதற்கான ஒரு போது இடத்தை எமக்கு தெரி வு செய்து தருமாறு உறவுகளிடம் அன்பாய் வேண்டுகின்றோம்
நாம் மனம் நிறைந்து கட்டிக் கொடுக்கும் இக் கிணற்றில் பல உள்ளங்களின் நீர் கஷ்டம் போக வேண்டும் என்பதே எமது எதிர் பார்ப்பாகும்

தொடர்புகளுக்கு thadagamkalaiilakkiyavattam@gmal .com அல்லது

sk.risvi @gmail .com பயன் படுத்தலாம்

நன்றி

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளர்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு

வியாழன், 25 ஜூலை, 2013

கவி நுறு கலைகள் வளர்ப்போம்





மிக நீண்ட கால வரலாறு உடைய இலக்கிய அமைப்பு. தடாகம் கலை இலக்கிய வட்டம்

இதன் தலைமை இடம் சாய்ந்தமருது - கல்முனை

ஆண்டு தோறும் அகஸ்தியர் /லங்கா தீபம் / கலைதீபம் விருதுகள் வழங்கி வருகிறது.
தடாகம் கலை இலக்கிய வட்டம் சீரிய இலக்கியத்தை பரப்பும் நோக்கம் கொண்டது.
நல்ல எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும் கௌரவப்படுத்துவதும் கருத்தரங்கங்களையும் ஆய்வரங்கங்களையும் நூல் வெளியீடுகளை
 கவியரங்கங்களையும் நடத்துகிறது.

01/01/2013ல் இருந்து தடாகம் கலை இலக்கிய கல்வி 
கலை கலாச்சார  சர்வதேச அமைப்பாக மாறி உள்ளது 

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆண்டு தோறும் பல கருத்தரங்கங்கள், பட்டறைகள் என நிகழ்ச்ச்சிகளை நடத்தி வரும் துடிப்பும் ஆர்வமுமிக்க ஒரு அமைப்பு

தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப் படுத்தும் நோக்கில் அண்
மைக் காலமாக சர்வதேச ரீதியில்
மாதா மாதம் கவிதைப் போட்டிகளை நடாத்தி வெற்றி பெற்றவர்களுக்கு கவியருவி /கவித்தீபம் பட்டங்களை வழங்கி வருகின்றது
நோயினால் சிரமப்பட்ட இரு உயிருக்கு எதிர் பாராத உதவிகளைச் செய்து உள்ளது (இன்று குணம் பெற்று சந்தோசமாக வாழ்கின்றார்கள்
பல ஆர்வலர்களின் சிறந்த பங்களிப்பினோடும் தடாகம் கலை இலக்கிய வட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.

தற்போது சிறந்த எழுத்துப் படைப்புக்களை தேர்ந்தெடுத்து பரிசளிப்பது பற்றியும்முயற்சிகள் செய்துவருகின்றோம்
என்வே, தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார 
கலை சர்வதேச அமைப்பின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பல மாற்றங்களை செய்யவுள்ளோம்

01/உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்தல்

02/வளரும் வளர்ந்து வரும் படைப்பாளர்களை உருவாக்குதல் (மாதத்துக்கு
ஒருமுறை படைப்பாற்றல் பற்றிய வழிகாட்டி முறைகளை பகிர்ந்து கொள்ளல் )

03/ நம் எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை இனம் கண்டு அவற்றை பதிப்பித்து, தமிழ்துறை சார்ந்த உறவுகளுக்கு வழங்கச் செய்வதன் மூலம் உதவிகள் செய்தல்

04/வசதிகள் இல்லாத எழுத்தாளர்களின் எத்தனையோ அரிய படைப்புகள் நூல்வடிவம் பெறாமல் முடங்கிக் கிடக்கின்றன.அவற்றை நூலாக்க நமது தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினர்(வசதிகள் உள்ளோர் )துணை நிற்க வேண்டும்.

05/ அனைத்துக்கும் மேலாக நமக்குள் ஒற்றுமையையும் மொழி உணர்வையும் பேணிக்காத்தல்.வேண்டும் .

சர்வதேசமட்டத்தில் தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூகஅபிவிருத்திஅமைப்பு இமயமாகஉயர்ந்துநின்று தமிழ்மொழிக்கும் தமிழ்பேசும் இனத்துக்கும்துணையாக இருத்தல் வேண்டும்

இது எமது இலட்சியமாகும் !


தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு மாதா மாதம் நடாத்திவரும் கவிதை போட்டிக்கு இம்முறை எதிர் பார்க்காதளவு பிரிவுக் கவிதைகள் வந்து சேர்ந்துள்ளது மிகவும் சந்தோசப் படுகின்றோம் கவிதைகள் அனுப்பிய அனைத்து கவி உள்ளங்களுக்கும் எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம் தயவு செய்து அனுதாபக் கவிதைகளை அனுப்பாமல் சமகாலக் கவிதைகளை அனுப்பி வைக்குமாறு அன்போடு வேண்டுகின்றோம் கூ டிய விரைவில் முடிவுகளை அறியத்தருவோம் உங்கள் கவிதைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 30/07/2013
கவினுறு கலைகள் வளர்ப்போம்
நன்றி
 

திங்கள், 8 ஜூலை, 2013

தடாகத் தாமரை 12



இந்தியாவின் பிரபல கவிஞர் முத்து பாலகன் அவர்களுடன் நேர்காணல் 

               

பேட்டி :- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 
( அமைப்பாளர் தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு )

வினா   :- தங்களின் முதல் கவிதை எது?  எந்த இதழில் வெளி வந்தது? 
அப்பொழுது தங்களுக்கிருந்த மனநிலை எப்படியிருந்தது? 

விடை :- முதல் இரு கவிதைகள் இவை தான். முகநூலில் தான் வெளியிட்டேன்.
பின்பு எனது முதல் கவிதைத் தொகுப்புப் புத்தகத்தில் வெளிவந்துள்ளது.

உறங்க முடியவில்லை
அரங்க நாடகத்தின்
சிறந்த பாத்திரம் நான்...!

வரம் வந்தாலும் வாடும்
சுகம் கொண்டாடும் சாபம்
சதி வந்தாடும் நேரம்
விதி என்றான பாரம்
சவம் போல் ஆன யோகம்
அவம் சுட்டாடும் பாவம்
சுரம் நில்லாத ராகம்
தரம் அல்லாத தாளம்
குணம் கெட்டாடும் காலம்
அகம் தள்ளாடும் நாளும்
பலன் இல்லாத தாயம்
இதம் எந்நாளும் மாயும்
வலி நன்றாக வாழும்

மனம் கொள்ளாத போதும்
உளம் மெல்லாத ஓலம்
எது வந்தாலே தீரும்
தினம் மன்றாடி ஓயும்
இது பொல்லாத சோகம்
நிதம் பட்டாடும் சீலம்
உயிர் விட்டாலும் போதும்
உடன் விட்டோடும் யாவும்!


இதயத்தில் வரும் மாற்றம் 
அது காதலா ...?
இருவர்க்கும் ஏற்பட்ட 
பரிமாற்றமா ...?
உணர்வுக்குள் உயிரோட்டம் 
எனதாகுமா ...?
கனவுக்குள் கடை போடும் 
களவாகுமா ...?
நினைவுக்குள் நடமாடும் 
நிசமாகுமா ...?
இரவுக்கும் பகலுக்கும் 
நிறம் மாறுமா ...?
இனிமைக்கும் இதன் மேலே 
பெரும் மோகமா ...?
தனிமைக்குள் நிறை தேடும் 
தவமாகுமா ...?
வலிமைக்கு விளைவாகும் 
வளமாகுமா ...?
சிறையிற்குள் சிலிர்த்தெழுந்த 
சிறகாகுமா ...?
கருவுக்குள் உருவாகும் 
விஞ்ஞானமா ...?
எழில் காண முடியாத 
தவிப்பகுமா ...?
மௌனத்தை மொழியாக 
வரவேற்குமா ...?
விரதத்தில் தலையான 
மதமாகுமா ...?

ஆம் காதல்... 
மனதுக்குள் மனம் போகும் 
இனம் தானம்மா ...! 
மானுடத்தில் உயர்வான 
நிலைதானம்மா ...! 
அறம் விளைக்கும் அன்புக்கு 
அடிநாதமே ...! 
அருளுக்கும் பொருள் தந்த 
திருவாகுமே ...!
இறைநிலையும் இதனுள்ளே 
இருப்பகுமே ...! 
அன்னைக்கும் அன்னை இது 
அதுபோதுமே ...!


வாழ்க்கை என்னை விட்டு வெளியேறிய பொழுது, அதன் வேதனையில் துடித்துத் தவித்த போது எழுதினேன், என் வலிகளைப் பொருக்க முடியாமல் வாரிக் கொட்டியது .

காதல் என்னை விட்டு விலகிய போது ,காதலால் துடித்துத் துவண்ட போது ,காதலை பற்றிய ஒரு தேடல், காதலைப் பற்றிய ஒரு ஏக்கம், காதலைப் படிக்கும் தாக்கம், காதல் என்றால் என்ன என்ற கேள்வி துளைத்தது ? என்னுள் மலர்ந்தது 

இரண்டும் ஒரே நேரத்தில் எழுதியதே உணர்வும் வலியும் ஒன்றே ஆனால் விடை  இரண்டு 



வினா :-  ஒரு நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள் ?

விடை :- ஈர்க்க வேண்டும் எல்லோரையும் அது தான் நல்ல கவிதை.
பாமரனும் பல தடவை உள்ளுணர்வோடு முனுமுனுக்க வைப்பது தான் ஒரு நல்ல கவிதை.

வினா :- உங்கள் படைப்புகளுக்காக ஒவ்வொரு நாளையும் எப்படித் திட்டமிடுகிறீர்கள் ?
                             
                     


விடை :- தனியாகத் திட்டமிடுவது யில்லை. ஒரு மின்னல் கீற்று போல வரும். எப்பொது என்று சொல்ல முடியாது. வந்தால் வந்து கொண்டே இருக்கும் தடுக்க முடியாது. கவிதையை முடித்து வைக்க அப்போது மிகவும் சிரமமாகவே இருக்கும். பிடித்து வைக்க வேண்டும் இல்லையேல் மறைந்துவிடும். நான் எழுதியதை விட என்னுள் தோன்றி மறைந்தவையே அதிகம். 

காரணம் சில நிமிடங்களுக்குள் பல வரிகள் வந்துவிடும். எழுதுவது கடினமாகவே இருக்கும். அவ்வளவு வேகமாகவே வரும். இது அடிக்கடி நிகழ்வது தான். எதோ என்னிடம் உள்ள ஒரு குறை தான் இது, தோன்றுவதை நினைவில் வைக்க இயலவில்லை.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் கவிதை தான். சுகம், துக்கம், கவலை, அமைதி, வெற்றி, தோல்வி, அவமானம், பெருமை, ஆசை, கனவு, காதல், தேடல் இப்படி எல்லாமே கவிதை தான். 
அனுபவங்களை ஆசைகளை வைத்துப் பிறக்கும் என் கவிதை. 

வினா :- கவிதையின் வடிவம் உள்ளடக்கம் எல்லாம் மாறிக் கொண்டேயிருக்கிறது. எதிர்காலக் கவிதை எப்படி இருக்கும். இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

விடை :- கால மாற்றங்களுக்கு ஏற்ப எவ்வடிவம் ரசிப்பவர்களை ஈர்க்குமோ அவையே எதிர்காலத்தில் கவி வடிவமாக நிலைக்கும். எளிமையாக இலகுவாக சொல்லப்படுங் கவிதை எக்காலத்திலும் நிலைக்கும்.
மரபுக் கவிதைகளும் எளிமையாக இலகுவாக இருப்பின் எக்காலத்திலும் நிலைக்கும்.


வினா :-  இலக்கிய உலகுக்கு உங்களது பங்களிப்பு குறித்து கூறுங்கள்?

விடை :- ஒன்றுமே இல்லை. 
உளறிக் கொண்டிருக்கின்றேன் ஏதோ என் வலிகளை. 
இலக்கிய உலகு எங்கு…? நான் எங்கு…? 
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்… என்னைப் பற்றி

ஒப்புக்குச் செய்த செப்புக் காசு யாம்
தப்புக்குள் தெளிந்த தர்க்க வாதந் தான்
வித்துக்குள் உழலும் உத்வேகம் யாம்
மொத்தத்தில் குழையும் அன்பு பாலகன் தான்

ஏடெடுத்துப் படிக்காத ஏகலைவன் இல்லை நான்
கூடறுக்குங் கூடாதக் குறிப்புகளை கொட்டுகின்றேன்
தேடலுக்குல் ஈடில்லா திகழ்வதாகு மிலக்கியமாய்ப்
பாடலுக்கு என்செய்வேன் படித்ததில்லை தமிழ் மொழியை…

வினா :- ழுத்துத்துறைக்குள் நீங்கள் வந்தது பற்றிக் கூறுங்கள்?

விடை :- வாழ்க்கையில் நான் வாங்கிய அடிகள் ஏமாற்றங்கள் வாழ்வா சாவா என்று தள்ளாட வைத்த சமயத்தில் தமிழ் என் வலிகளை, வேதனைகளை வடித்து வைத்தது; முகநூல் மூலமாக. தீய பழக்கங்கள் ஏதுமில்லாத்ததால் ஒரு மாற்றத்திற்காகத் தவித்த என்னைத் தாங்கியது தமிழ், தாலாட்டியது தமிழ். ஏன் முடிந்த வாழ்வை புதுப்பித்தது தமிழ், வாழ வேண்டாம் விடை பெறுவோம் என்ற என் முடிவை மாற்றியது தமிழ். உடன் ஊக்குவித்து வாழவைத்தவர் முகநூல் மூலமாக உடன் பிறவா சகோதரர் அண்ணன் திரு லோகநாதன் பொன்னுசாமி … கொழும்பு, இலங்கை. 

தமிழ் எழுதவே தெரியாது. சொற்பிழைகள் அதிகமிருக்கும். ஆனாலும் தளரவில்லை. முகநூல் மூலமாக உடன் பிறவா சகோதரர் அண்ணன் திரு இரா தியாகராசன் புதுச்சேரி அவர்களின் உறுதுணையும், வழிகாட்டலும் இந்த மக்கு மண்டையைத் ஓரளவே தேற்றியது.

வினா :- கவிதை பற்றி யாது கருதுகிறீர்கள்?

                                               



விடை :- சொல்வது கவிதை
சுவை படச் சொல்வது அருமை
எளிமையா யிருப்பது வளமை 
இதயந் தொடுவது முழுமை

வினா :- புலம்பெயர் கவிஞர்களில் 2000 ற்குப் பின்னர் யார் யாரைக் குறிப்பிட்டுக் கூறுவீர்கள்?

விடை :- அந்த அளவிற்கு விவரங்கள் தெரியாது. பலர் பற்றிய அறிமுகமே என்னக்குள் இல்லை. காரணம் நான் எழுதத் துவங்கியதே 2010க்குப் பிறகுதான்

வினா :-  எமது படைப்பாளிகள் மற்றும் படைப்புக்களின் நிலை எவ்வாறு உள்ளது?

விடை :- பல படைப்பாளிகள் மெய் சிலிர்க்க வைக்கின்றனர். ஆனால் சகோதரர் கவியன்பன் கலாம் அவர்களின் மரபு வடிவம் என்னைச் சொக்க வைக்கும் பல நாள்.



வினா :-  தாடாகம் கலை இலக்கிய வட்டம் பற்றி உங்கள் கருத்து ?

விடை :- நல்ல தொரு முயற்சி தமிழ் வளர்க்க 

வினா :- தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஈழத்துபத்திரிகைகளின் பங்களிப்புக் குறித்து ஏதாவது கூற முடியுமா ?

விடை :- ஈழப் பத்திரிகைகள் பற்றி ஒரு விவரமுந் தெரியாது.

வினா :-  இணையத்தள சஞ்சிகைகளின் வரவும், அதில் பங்களிப்புச் செய்யும் வாசகப் பரப்பும் தற்போது அதிகரித்துள்ளது. இது குறித்து தாங்கள் கருதுவது யாது ?

நல்ல வளர்ச்சி. சுய ஒழுக்கம் கெடாத வரையில், ஆரோக்கியமான தனி மனிதக் காழ்புணர்ச்சி இல்லாத வரையில். 

பின்நவீனத்துவம் எங்கள் சூழலில் எங்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூ ற ஏற்றதொரு கோட்பாடாக உள்ளது என்று கருதுகிறீர்கள்?

கோட்பாடு என்பதை விட வழி வகுத்திருக்கின்றது எனலாம்

இதில் “எங்கள்” என்பது யாரைக் குறித்து சொல்லி யிருக்கின்றீர்கள் என்றறியவில்லை. 

பொதுவாக எல்லோருக்கும் உள்ளதைச் சொன்னேன்.

நவீனத்துவம் என்பது தொடர்பு எல்லைகளை உடைத்துள்ளது, உலகத்தை ஒரு கைப் பிடிக்குள் கொண்டு வந்துள்ளது. மற்றபடி அறிவின் வளர்ச்சியில் முதிர்ச்சி யில்லை, ஒரு அளவற்ற வளர்ச்சி சமச்சீராக இல்லாமல் போவது நோய் தானே. நவீனத்துவமும் இன்று ஒரு சமச்சீரில்லாத வளர்ச்சியைத் தான் கொண்டுள்ளது.

உம்:- நவீன அறிவியல் உலகம் இன்னுங் கண்டுபிக்கத் தடுமாறும் கட்டுப் படுத்தப்பட்ட சம சீதோசன அணுச்சிதைவை CONTROLED COLD FUSION AND CONTINUES SELF RADIO ACTIVE MUTATION அநாயசமாக ரச வாதம் என்று (ரச சஞ்சாரம் என்பது RADIO ACTIVE WAVES) செய்து காண்பித்தது உலகத்திலேயே நம் தமிழ் நாட்டில் தான். பாதரசத்திற்கும் தங்கத்திற்கும் அணு அடுக்கு வரிசை அமைப்பில் ஒரே ஒரு ELECTRON அதிகமிருப்பதையும் அதை கட்டுப் படுத்தப்பட்ட சம சீதோசன அணுச்சிதைவினால் நீக்கி பாதரசத்தைத் {Number of Protons/Electrons: 80} தங்கமாக {Number of Protons/Electrons: 79} மாற்றும் வித்தையைக் கண்டுபிடித்து செய்து காண்பித்தவர்கள் நம் சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன். 

நவீனம் இன்னும் முறையாக வளரவேயில்லை. அதற்குப் பணம் வியாபாரம் என்ற நோக்கம் முதன்மையாகிப் போனதால் சமச்சீரான வளர்ச்சி யடையவில்லை

வினா :- இன்றைய நவீன பெண் எழுத்தில் உங்களை கவர்ந்த எழுத்தக்கள் பற்றி சொல்லுங்கள்?

                                             



விடை :- சகோதரி பிரேமலதா மற்றும் சகோதரி தமிழ்ச் சொல்வி நிக்கோலஸ் அவர்களின் கவிதைகள் எம்மைக் கவர்ந்தவை. 

வினா :-  இன்றைய சூழல் ஏதாவது எழுதத்துண்டியிருக்கிறதா?

விடை :- நிறைய எழுதியும் இருக்கின்றேன் .

வினா :- உங்கள் எழுத்தை செம்மைப்படுத்த அல்லது எழுத்துப்பரப்பை விரிக்க என்ன செய்கிறீர்கள்?

விடை :- சுய பரிசோதனை…

என்னை,…. என் எழுத்துக்களை


வினா :-  எழுதத்தொடங்கிய சூழல் பற்றியும் எழுதி வருகிற சூழல் பற்றியும் சொல்லுங்கள்.

விடை :- எழுதத் துவங்கியது வலியிலிருந்து விடுதலை பெற… இப்போது என் இலக்கு நோக்கிய பயணமாக மாறியுள்ளது. சூழல் மாறாமலே அப்படியே தான் உள்ளது.

வினா :-  யாருடைய கவிதைகளை (எழுத்துக்களை ) அதிகம் வாசிப்பீர்கள்?

விடை :- கவிதை கண்ணதாசன், வாலி பெரும்பாலும் இவர்களுடையது தான்.

பாவினத்தில் மிகவும் பிடித்தது அருணகிரியார் தமிழ் நடை.
எழுத்துக்களில்… சாண்டில்யனின் காதலன் நான்

வினா :-  உங்களது இலட்சியம் எதிர்பார்ப்பு என்ன ?

விடை :- இல்லாதவருக்கு இலவசக் கல்வி அவர் விரும்பும் வரை…

தமிழின் பெருமை அறிய அறிய இன்று வரை எல்லோரும் தமிழின் பன் முகங்களில் கலை இலக்கியம் என்ற முகம் மட்டும் புதுப்பித்து வைத்துள்ளனர். அதன் அறிவியல், வேதியியல், தொழில் நுட்பம், மருத்துவம் போன்ற அதிசயத் தக்க முகங்கள் தொலைக்கப் பட்டது அறிந்து மிகவும் வேதனை. இதை ஆரம்பித்து வைத்து விட்டாவது என் உயிர் பிரிய வேண்டும் என்ற இலக்கு உள்ளது.



வினா :-  உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் பரிசுகள் பற்றி ?

பரிசு -  முகநூல் நட்புகளின் அன்பு, 

பாராட்டுக்கள் - முகநூல் மூலம் சொந்தகளான உடன் பிறவா உறவுகள். அதிலும் பாசம் மிகு தமக்கையார்கள் தான் அறுதிப் பெரும்பான்மை,

வினா :- நவீன இலக்கியக் கொள்கைகளை நீங்கள் விரும்புகின்றீர்களா ?

விடை :- நவீன இல்லக்கியங்களுக்கு கொள்கை எங்கு இருக்கின்றது. 
கொள்கையே இல்லாதது தான் இன்றைய நவீன இலக்கியங்கள்
கொள்கை யென்றால் ஓர் இலக்கு இருக்க வேண்டும், அதை அடைய சில கட்டுப்பாடுகள் சுயமாக வரவேண்டும். 
நவீன இலக்கியங்களுக்கு அப்படி ஒரு கொள்கை இருக்கின்றதா…? எமக்குத் தெரிந்தவரை இல்லை

                                        


வினா :-  வளரத் துடிக்கும் இளையவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் ?

விடை :- அன்பும் அறமும் தொலைக்க வேண்டாம்… எக்கணமும், எக்காலத்திலும், எச்சூழலிலும்.
முன்னெற்றத்திற்கு அறிவு உதவலாம். ஆனால் அதை நிலை நிறுத்திவைக்க, ஒரு சரிவு வரும் போது தாங்கி நிற்க, மீண்டும் முயன்று வெற்றி பெற அன்பும் அறமும் கண்டிப்பாக வேண்டும்.

மிக்க நன்றி

புதன், 15 மே, 2013

தடாகம் கலை இலக்கிய கல்வி ,கலை, கலாச்சார ,சமூக அபிவிருத்தி ,சர்வதேச அமைப்பின் அறிமுகம்

 வெலிகம ரிம்ஸா முஹம்மத்




















வாழ்க்கைக் குறிப்பு

தென் மாகாணம், மாத்தறை மாவட்டம்,வெலிகம தேர்தல் தொகுதியைச் சேர்ந்த கவிதாயினி வெலிகம ரிம்ஸா அவர்கள் முஹம்மத் - லரீபா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார்.

வெலிகம அறபா தேசிய பாடசாலை மற்றும் வரக்காப்பொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியாவார். கணக்கீட்டுத் துறையில் MAAT, MIAB ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர், தனியார் நிறுவனத்தில் உதவிக் கணக்காளராக கடமையாற்றி வருகிறார்.


இலக்கிய ஈடுபாடு

இவர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் என்ற சொந்தப் பெயரிலும், வெலிகம கவிக்குயில், வெலிகம நிலாக்குயில் என்ற புனைப்பெயர்களிலும் எழுதி வருவதுண்டு. 2004இல் தினமுரசு பத்திரிகையில் 'நிர்மூலம்'என்ற கவிதையை எழுதியதையடுத்து இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 50க்கும் மேற்பட்ட நூல் விமர்சனங்களையும் எழுதியுள்ளார்.

இதழியல் துறை

தற்போது பூங்காவனம் இலக்கிய வட்டம் என்ற இலக்கிய அமைப்பின் தலைவராகவும் பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் சேவையாற்றி வருகிறார்.





ஊடகத்துறை

• 1997 - 1998 ஆம் ஆண்டுகளில் சூரியன் எப்.எம் அலைவரிசையில் இவரது ஏராளமான கவிதைகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.

• சுமார் ஒன்றரை வருட காலங்களாக (2004 - 2005) இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியில் பிரதிகள் தயாரித்தும், நேரடியாக குரல் கொடுத்துமுள்ளார்.

• 2008 டிசம்பர் 09 இல் நேத்ரா அலைவரிசையில் ஹஜ் பெருநாள் கவியரங்கத்தில் கவிதை கூறியிருக்கிறார்.

• 2009 ஜூன் 29 இல் நேத்ரா அலைவரிசையில் முஸ்லிம் நிகழ்ச்சியில் கவிதை கூறியிருக்கிறார்.

• 2011 பெப்ரவரி 13 இல் கவிஞர் திரு. சடாகோபன் அவர்களின் தலைமையில் சக்தி எப்.எம். அலைவரிசையில் கவிராத்திரி நிகழ்ச்சியில் கவிதை கூறியிருக்கிறார்.

இதுவரை வெளியிடப்பட்ட நூல் வெளியீடுகள்

01. வங்கிக் கணக்கிணக்கக் கூற்று (கணக்கீடு) 2004 - சுஹா பப்ளிகேஷன்

02. கணக்கீட்டுச் சுருக்கம் (கணக்கீடு) 2008 - காயத்திரி பப்ளிகேஷன்

03. கணக்கீட்டின் தெளிவு (கணக்கீடு) 2009 - இஸ்லாமிக் புக் ஹவுஸ்

04. தென்றலின் வேகம் (கவிதை) 2010 - முற்போக்கு கலை இலக்கிய மன்றம்

05. ஆடம்பரக் கூடு (சிறுவர் கதை) 2012 - ரூம் டு ரீட்

06. என்ன கொடுப்போம்? (சிறுவர் கதை) 2012 - ரூம் டு ரீட்

07. பாடல் கேட்ட குமார் (சிறுவர் கதை) 2013 - ரூம் டு ரீட்

08. கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை (விமர்சனம்) 2013 - கொடகே வெளியீடு


வெளிவர இருக்கும் நூல்கள்

01. எரிந்த சிறகுகள் (கவிதை)

02. வண்ணாத்திப் பூச்சி (சிறுவர் பாடல்)




கவிதைகளின் பாடு பொருள்கள்

காதல், பெண்ணியம், சமூக அவலம், சீதனக் கொடுமை, போர்ச்சூழல், மானிட நேயம் என்பன இவரது பாடு பொருள்களாக காணப்படுகின்றன.



இவர் பற்றிய குறிப்புக்கள்

• செந்தூரம் - 2004ம் ஜூலை 04

• 2007 பெப்ரவரியில் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்கள் வெளியிட்ட இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 07ல் 175 ஆவது நபராக இவரைப்பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

• ஞானம் - 2007 ஜூன் இதழ்

• சுடர் ஒளி பத்திரிகையின் 'உணர்வுகள்' பகுதி - 2008 பெப்ரவரி 3 - 9

• செங்கதிர் - 2008 ஜூலை இதழ்

• நவமணி பத்திரிகையில் வெளியான 'இலங்கை திசை பரத்தி - 2008 ஜூலை 20

• மித்திரன் கலாவானம் - 2009 நவம்பர் 08 (அமரர் ஸ்ரீதர் பிச்சையப்பா)

• மித்திரன் கலாவானம் - 2010 ஏப்ரல் 18 (க. கோகிலவாணி)

• தினகரன் கதம்பம் - 2011 ஜனவரி 23

• கவிஞன் சஞ்சிகையின் அட்டைப்படத்தில் இவரது புகைப்படத்தை பிரசுரித்து இவர் பற்றிய தகவல்களை வெளியிட்டு கௌரவித்திருந்தது - 2012 ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான இதழ்

• முத்துக்கமலம் இணையத்தளம்

• விக்கிப்பீடியா வலைத்தளம்

• காற்றுவெளி இணைய இதழ்



இவரது படைப்புக்கள் இடம்பெற்றுள்ள பிற நூல்கள்

• இந்தியாவில் வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்காலுக்குப் பின் என்ற கவிதைத் தொகுப்பில் இவரது கவிதை இடம் பெற்றுள்ளது.

• 2011 ஜூன் மாதம் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் அமைப்பினால் வெளியிடப்பட்ட உன்னை நினைப்பதற்கு என்ற கவிதைத் தொகுப்பில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.



நேர்காணல்கள்

• மித்திரன் வாரமலர் - 2009 நவம்பர் 22

• நேத்ரா அலைவரிசை உதய தரிசனம் சிறப்பு அதிதி நேர்காணல் - 2010 ஜனவரி 20

• எங்கள் தேசம் - 2010 ஆகஸ்ட் 01 - 14

• தினகரன் வாரமஞ்சரி செந்தூரம் இதழின் அட்டைப்படத்தில் இவரது புகைப்படத்தை பிரசுரித்து நேர்காணல் செய்து கௌரவித்திருந்தது - 2011 மார்ச் 13

• டேன் அலைவரிசை இன்றைய பிரமுகர் சிறப்பதிதி நேர்காணல் - 2011 மார்ச் 23

• தினமகுடி சஞ்சிகையில் இவரது புகைப்படத்தை பிரசுரித்து நேர்காணல் செய்து கௌரவித்திருந்தது. – 2013 மார்ச் இதழ்



விருதுகள், பரிசுகள்

• 2007 இல் அகில இன நல்லுறவு ஒன்றியம் இவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி 'சாமஸ்ரீ கலாபதி' என்றபட்டத்தை கொடுத்து கௌரவித்துள்ளது.

• 2008 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தினால் நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

• 2011 இல் அல்ஹஸனாத் சஞ்சிகை நாடளாவிய ரீதியில் நடாத்திய பேனாக்கள் பேசட்டும் என்ற கவிதைப் போட்டியில்பாராட்டுப் பத்திரம் பெற்றுள்ளார்.

• 2012 இல் கொழுந்து சஞ்சிகையினால் சர்வதேச மகளிர் தின விழாவில் இதழியல் துறையில் ஆற்றிவரும் பணிக்காக இவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி சாதனைக்குரிய மகளிர் விருது பட்டத்தை கொடுத்து கௌரவித்துள்ளது.



இவரது ஆக்கங்கள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள்

• வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன்,மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நவமணி,விடிவெள்ளி, எங்கள் தேசம்,இருக்கிறம்,வேகம், ஜனனி போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகள்.

• ஓசை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர்,படிகள், அல்லஜ்னா, அல் ஹஸனாத், அஸ்ஸகீனாஹ், தூது, ஞானம், நீங்களும்எழுதலாம், மல்லிகை, பேனா, மொழி மற்றும் இந்திய இதழான இனிய நந்தவனம் போன்ற சஞ்சிகைகள்.

• வார்ப்பு, முத்துக்கமலம், கீற்று, தமிழ் ஆதர்ஸ், பதிவுகள், ஊடறு, திண்ணை, தேனீ ஆகிய இணையத்தளங்கள்.



அங்கத்துவம் வகிக்கும் இலக்கிய அமைப்புகள்

• ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி

• இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்



இவரது வலைப்பூக்கள்

• www.rimzapoems.blogspot.com

• www.rimzavimarsanam.blogspot.com

• www.rimzapublication.blogspot.com

www.rimzachildrenstory.blogspot.com




தொடர்புகளுக்கு

Mobile - 077 5009222

E-mail - poetrimza@gmail.com



வெலிகம ரிம்ஸா முஹம்மத் கவிதை


முரண்பாடுகள்!



நீ கடலில் முத்தெடுக்க

ஆசைப்படுகிறாய் - ஆனால்

மூச்சடக்க அச்சப்படுகிறாய்!



வெற்றிக் கம்பத்தைத் தொட

நினைக்கிறாய் - ஆனால்

தோல்விகளைத்

தாண்ட மறுக்கிறாய்!



உயரப் பறக்க கனவு

காண்கிறாய் - ஆனால்

இருந்த இடத்திலேயே

இருந்துகொள்கிறாய்!



வெளிச்சத்தை தேட

நினைக்கிறாய் - ஆனால்

இருளைக் கண்டு

அச்சப்படுகிறாய்!



பூப் பாதைகள்

வேண்டும் என்கிறாய் - ஆனால்

கற்களையும் முற்களையும்

கடக்க மறுக்கிறாய்!



இஷ்டம் போல வாழ

ஆசைகொள்கிறாய் - ஆனால்

கஷ்டப்பட்டு உழைக்க

மறுத்துவிடுகிறாய்!



தொழிலதிபராக

கனவு காண்கிறாய்

சிறிய நட்டங்களை

தாங்க பயப்படுகிறாய்!



அதிகாரம் பண்ண

ஆசைப்படுகிறாய் - ஆனால்

கட்டளைகளுக்கு அடிபணிய

மறுக்கிறாய

நன்றி -



கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
 

வியாழன், 9 மே, 2013

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பின் - அறிமுகம்


கவிஞர் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.



இலங்கை,யாழ்ப்பாணம் கோப்பாய் நாவலர் பாடசாலை முன்னாள் ஆரம்பகர்த்தாவும் தலைமையாளரும், யாழ் அரச குடும்ப இரண்டாவது பரராஐசேகரன் (எதிர்மன்னசிங்கன்) வம்சாவழி வந்த முருகேசு சுவாமிநாதர் -சிவகாமிப்பிள்ளையின் இரண்டாவது மகன் நகுலேஸ்வரர் அவர்களின் மகள் வேதா

புத்தூர் மாளிகைப் பொன்னம்பலம்-தெய்வானைப் பிள்ளை தாயார்

நர்சரி ஆசிரியையாக கோப்பாயில் ஓரு வருடம் வேலை செய்கையில் . திருணமாகி ஹொரண நகரத்தில் ஒரு கிறீஸ்தவ பாடசாலையில் பிரதி ஆசிரியராகச் சிறிது காலம் பணியாற்றிய பின் . டென்மார்க்கிலும் சிலகாலம் பிரதி ஆசிரியராகத் தமிழ் பாடசாலையில் கடமை புரிந்துள்ளார்

1976ல் இலங்கை வானெலியில் ‘பூவும் பொட்டும்’ மங்கையர் மஞ்சரிக்கு எழுதியதில் இருந்து இவரது எழுத்துச் பயணம் ஆரம்பம்.



பாடசாலையின்பலபோட்டிகளிலும்படிக்கும் காலத்திலிருந்து பங்கு பற்றிப் பரிசு பெற்றுள்ளார்

திருமணமாகிக் கணவரின் ஊக்குவிப்பில் டென்மார்க், யேர்மனி, இலண்டன் ஆகிய இடங்களில் இருந்து வெளி வந்தசஞ்சிகைகள் சிலவற்றிலும் எழுதியுள்ளார்

வானொலி, தொலைக்காட்சிகளில் விமர்சனம், கவிதை, அனுபவக் கட்டுரைகள் எழுதி வாசித்துள்ளார் வாசித்தும் வருகின் றார்

ரி.ஆர்.ரி தமிழ் அலை ஐரோப்பிய வலத்தில் இரண்டேகால் வருடங்கள் டென்மார்க் செய்திகளும், இலண்டன் தமிழ் வானொலியில் தகவல் சாலயில் இரண்டு வருடங்கள் டென்மார்க் செய்திகளும் வாசித்துள்ளார்


2002ல் ‘வேதாவின் கவிதைகள்’ நூலும்

2004ல் ‘குழந்தைகள் இளையோர் சிறக்க’ என்ற தலைப்பில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் கொண்ட நூலும்,

2007ல் ‘உணர்வுப் பூக்கள் எனும் கவிதை நூலை வேதாவும் அவரது கணவருமாக இணைந்து வெளியிட்டார்கள்

http://www.noolaham.org/wiki/index.php?title=முதற்_பக்கம்

இங்கு இவை மின்னூல்களாக உள்ளன.

இசை, நடனம் கலைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் ரசிப்பதுண்டு. மேடைகளில் கவிதைகள் வாசிப்பதுண்டு. தமிழெனும் வேர் காக்கும் விதைப்பு இது. டேனிஸ் மொழியில் குழந்தைகள் பராமரிப்பு (நர்சரி) பற்றிய கல்வியை மூன்று வருடங்கள் படித்து ‘பெட்டகோ’ எனும் தகுதியை 1993ல் பெற்று 3லிருந்து 12 வயது டெனிஸ், தமிழ்ப் பிள்ளைகளுடன் சுமார் பதினைந்து வருடங்கள் வேலை செய்துள்ளார்

இன்று பதிவுகள்.கொம், வார்ப்பு.கொம் , முத்துக்கமலம்.கொம், தமிழ்ஆத்தேர்ஸ்.கொம் இன்னும் சிலவற்றில் (அலைகள்.கொம், தமிழ்விசை.கொம்) அவ்வப்போது எழுதிக் கொண்டு உள்ளார்

செந்தமிழ் நூலெடுத்துக் கவி மாலிகை, பாமாலிகையென பாக்களால் மாலை, சிந்தனை மொழி, கட்டுரை, கதை என்று பல வகைகளாகப் புனையும் இணையச் சாலையில் இவரது இடுகைகளை வாசியுங்கள். வாசிப்பதோடு நின்றுவிடாது உங்கள் கருத்துக்களையும் இங்கு பதிவு செய்யுங்கள். உங்கள் ஒவ்வோரு சொல்லும் வேதாவை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கும்

கூகிள் தேடலில் – வேதா இலங்காதிலகம் - (தமிழில்) (In english Vetha Elangathilakam) எழுதி அழுத்துங்கள் மேலும் விவரங்கள் பெறுவீர்கள்.

http://ta.wikipedia.org/wiki/வேதா_இலங்காதிலகம்

இவரைப்பற்றி கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவில் உள்ளதையும் பார்க்கமுடியும்

இது அலைகள்.கொம் இணையத்தளத்தில் வேதாவுடனான பேட்டி.http://www.alaikal.com/news/?p=38761#more-38761


நன்றி.

அன்புடன் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

அமைப்பாளர்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு

தடாகத் தாமரை -11



தனித் தமிழ் தென்றல்

இந்த நூற்றாண்டின் சிறந்த கவிஞர்களில் ஒருவராக பெயர் கூறிப்பிட்டு சொல்லலாம் தூய தமிழே தம் வாழ்வின் உயிர் மூச்சாக கொண்டவர் ஆரவாரம் எதுவுமின்றி எழுதி வருபவர் அவர்தான்.




சகோதரக் கவிஞர் -மு. ஆ. பீர்ஒலி
முதன்மை வர்த்தக ஆய்வாளர் தெற்கு தொடர்வண்டித் துறை, மதுரை மண்டலம்


பேட்டி : கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அமைப்பாளர் தடகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார               சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு



01 . தங்களின் முதல் கவிதை எது? எந்த இதழில் வெளி வந்தது?
அப்பொழுது தங்களுக்கிருந்த மனநிலை எப்படியிருந்தது?


1973 ம் வருடம் அமெரிக்கன் கல்லூரி, மதுரை யில் இளங்கலை ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் பொழுது உதயத்தில் உருவான  ‘மலர்கிறது’  (நித்திரைப் பயணங்கள்-பக்கம் 19 ல் பதிவாகியுள்ள
) அந்த கவிதைதான் எனது கல்லூரியின் ‘குரல்’ பத்திரிக்கையில் வெளியானது.




இரவின் அமைதியில்
உறக்கத்தின் கைச்சிறையில்
பருவத்தின் மொட்டு
கனவாய் மலர்கிறது
நினைவின் நித்திரையில்
நிசப்த நீள் திரையில்
ஸ்பரிசத்துச் சுவர்க்கத்தில்
பனி அரும்பு மலர்கிறது
உண்மையின் ஒளி தன்னில்
உணர்ச்சியின் உயிர்த் துடிப்பில்
தூய்மைக் கொடி தன்னில்
தெய்வீகம் மலர்கிறது
வறுமைத் தழுவல்களில்
வருத்த அழுத்தங்களில்
கண்ணீர்க் கதகதப்பில்
கவிதை மலர்கிறது


எழுதிய முதல் கவிதையே அங்கிகாரம் பெற்று கல்லூரி இதழில் பிரசுரமானதும் நண்பர்கள் பாராட்டியதும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
அந்த காலக்கட்டத்தில் இலக்கிய சிற்றிதழ்களின் தாக்கங்கள் நிறையவே இருந்தது. மருத்துவம் பயின்று கொண்டிருந்த டாக்டர். அருணகீதாயனனின் ‘பாடித்தேன் கவிவனம்’ என்ற இதழில் அடுத்த கவிதை பிரசுரமானது. அந்த இதழை தொலைத்த நிலையில் எழுதிய 4 பத்திகளில் 1 பத்தி மட்டுமே அப்படியே நினைவில் கொள்ள முடிந்தது. நித்திரைப் பயணங்கள் அச்சேரும் வரை எவ்வளவோ முயன்றும் எழுதிய கருத்து மட்டுமே நினவில் நிற்க அந்த வரிகளை நினைவில் கொள்ளமுடியாமல் வேறு வார்த்தைகளில் எழுத மனமின்றி அந்த 1 பத்தி மட்டுமே 





அச்சில் இணைத்தேன்.
திசை தெரியா பறவை
தஞ்சமென்று வந்தவளை
பஞ்சணையில் புடம் போடும்
பாவமயப் பொய்கையில்
மான சிறுகுருவி
மல்லாந்து மிதக்கிறது
(நித்திரைப் பயணங்கள்-பக்கம் 55 ல் பதிவாகியுள்ளது)


02 .  ஒரு நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?


தான் வாழும் சமுகத்தின் அவலங்களை, அறியாமையை, அநீதியை தைரியமாகச் சுட்டிக் காட்டுபவைகளாய் இருக்க வேண்டும். தன்னைப் படித்து, மனிதனின் அகம் புறம் மாயைகளை உணர்த்தி ஒவ்வொரு கவிதையும் எதாவது ஒரு ஆக்கப்பூர்வமான விடியலுக்கான வித்தைப் பரிணமிக்க வேண்டும்.

03 . உங்கள் படைப்புகளுக்காக ஒவ்வொரு நாளையும் எப்படித் திட்டமிடுகிறீர்கள் ?





உண்மையை திறந்த மனதுடன் சொல்வதென்றால், எழுத வேண்டும் என்று திட்டமிடுவதில்லை. நான் அன்றாடம் சந்திக்கும், பார்க்கும், பாதிக்கும் விஷயங்கள் எனக்குள் இழைந்து உழன்று கொண்டேயிருக்கும். அந்த உணர்வுகள் என்றாவது ஒரு நாள், எத்துனை நாட்கள் என்று சொல்ல முடியாது, தூக்கத்தில் கூட கவிதையாய் உறுமாறும். அக்கனமே எழுதிவிடுவேன். பெரும்பாண்மையும் அந்த வரிகள் மறுதிருத்தம் செய்யாமலேத்தான் பதிவு செய்யப் பட்டுள்ளன.
நித்திரைப் பயணங்கள்-பக்கம் 51/52 ல் பதிவாகியுள்ள விடியலை நோக்கி... என்ற கவிதையின் கரு 1980 களிலேயே என்னைப் பாதித்த விஷயங்கள். நித்திரைப் பயணங்கள் இரண்டாம் பிழைத்திருத்தம் முடிந்து அச்சேரும் சமயம் மணிவண்ணன் ஐயா(தகிதா பதிப்பகம்) தொடர்பு கொண்டு இன்னும் கூடுதலாய் பக்கங்கள் இணைத்தால் சிறப்பாய் இருக்கும் என தகவல் சொல்ல, அடுத்த தொகுப்பான ‘நினைவின் நிசப்தம்’ திற்காக (மார்ச் 2012) எழுதிக் கொண்டிருந்த கவிதைகளில் ஒன்று தான் இது.


கழிவு நீரோடை
சிறு மதகு
சல்லடித்து சல்லரித்து
வேர்த்திருந்தான்.
குப்பைத் தொட்டி
இரை தேடி
காகங்கள் ஒருபுறம்
நாய்கள் மறுபுறம்
இடையில்
பொறுக்கிய இலைகளை
ஆய்ந்து கொண்டிருந்தவன்
ஆராய்ச்சி தடைபட்டது
தெரு முனையில்
ஓரு பிச்சைக்காரியின் முனங்கல்
வயிற்றுப்பசி போக்க
யாருடைய பசிக்கோ
இரையாகிக் கொண்டிருந்தாள்
இது சுதந்திர நாடு
விடியலை நோக்கி.

04 . கவிதையின் வடிவம் உள்ளடக்கம் எல்லாம் மாறிக் கொண்டேயிருக்கிறது. எதிர்காலக் கவிதை எப்படி இருக்கும், இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

கவிதை என்பது மனதிற்குள் தீர்க்கமாக உணரப்பட்ட, சமூக அக்கரையுடன் இணைந்த ஆழ் மனதின் உணர்த்தலின் வெளிப்பாடாகவே நன் கருதுகிறேன். கவிதையின் கருத்துத்தான் அவசியம். வடிவம் எப்படி இருந்தால் என்ன? சொல்ல நினைந்த கருத்தைத் தெளிவுபட சொல்வதுதான் கவிதை. எதிர் காலக் கவிதைக் குறித்து சொல்ல இயலவில்லை. Classical, Renaissance then Modern Literature என ஒவ்வொரு கால கட்டங்களிலும் கவிதை ஒவ்வொரு பரிணாமங்களைத் தாண்டி வளர்ந்துள்ளது. மனித நேயம் குறித்த சிந்தனை சமூக விளிப்புணர்வுடன் கூடிய உணர்வுகள் இருத்தல் அவசியம்.


05 . தங்களின் குடும்பம் குறித்து கொஞ்சம் ?


மனைவி, இரு மகள்கள் ஒரு மகன். மனைவி B.Sc.,(Chemistry), இல்லத்தரசி. மூத்தமகள் M.Sc.,(IT), கடைசிமகள் பத்தவது படித்துக் கொண்டிருக்கிறாள். மகன் B.E (ECE) கடைசி பருவம் நான் M.A (Eng.Litt)., B.L., தெற்கு தொடர் வண்டித்துறையில் மதுரையில் முதன்மை வர்த்தக ஆய்வாளர்.


06 . இலக்கிய உலகுக்கு உங்களது பங்களிப்பு குறித்து கூறுங்கள்?


நான் துளிர்விடும் இளந்தளிர். மனதிற்கு சரியென்று பட்டதை, அனுபவித்தை, கிரகித்த விஷயங்களை, மனிதம், மானுடம், ஆன்மிகம், களங்கமற்ற அன்பு உண்மை இவைகளின் தேடலில் உள் உணர்வு சொல்வதை எழுதுகிறேன். இவைகள் இலக்கிய உலகுக்கு பங்களிக்கின்றனவா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.
07 எழுத்துத்துறைக்குள் நீங்கள் வந்தது பற்றிக் கூறுங்கள்?

1973ல் இருந்தே ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் கவிதை எழுதி வருகிறேன். 1981ல் ‘தி விஷன்’ என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன். இப்பொழுது அதை பேராசிரியர் மணிவண்ணன் ஐயா அவர்கள் தமிழாக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். தகிதா பதிப்பகம் விரைவில் வெளியீடு செய்யும். அவ்வப்பொழுது தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய போதும் 2012 ல் உத்தியோகம் மற்றும் பொது வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அணுபவங்கள், மனித மனங்களின் முரண்பாடுகள், நம்பகத்தன்மையற்ற சந்தர்ப்பவாத சுயநல மனிதர்களின் அடையாளம் இவைகள் ஜூன் 2012ல் விருப்ப ஓய்வு கொடுக்க வைத்தது. ஆனால் எனது மேல் அதிகாரி மதிப்பிர்குறிய எல். வீரநாராயணன் அவர்களின் ஆலோசனையின் பேரில் மீண்டும் ஆகஸ்ட் மாதம் 2012 உத்தியோகத்திற்குத் திரும்பினேன்.
அன்று எனக்குள் ஒரு நிகழ்வு. இனிமேல் நான் மிகவும் விரும்பிய இலக்கியத்தை மட்டுமே பற்றி, சுவாசித்து, உணர்ந்து அதன் வழி எனக்கும் இந்த மானுடத்துக்கும் சமுதாயத்திற்கும் என் இலக்கிய பயணத்தை பயணுடையதாய் செய்யமுடியுமா என்ற எண்ணத்தில் நித்திரைப் பயணங்கள் தொகுப்பில் பதிந்த முதல் கவிதையை எழுதினேன்.


மலரின் பயணம்
கார் காலம்
படர்ந்து விரிந்த
மேக சிறகுகள்
சிறைப்பட்டிருக்கும் நிலவு
முரண்பாடுகள்
செதுக்கிய
பரிணாம சுவடுகள்
ஒளியைத் தேடி
ஒரு மலரின்
பயணம் தொடங்கியது.


இந்த காலகட்டத்தில் தான் கோவை தகிதா பதிப்பகத்தின்
அறிமுகம் கிடைத்தது. நித்திரைப் பயணங்கள் என்ற தலைப்பில் கவிதை நூல் ஒன்று எழுதிக் கொண்டிருப்பதையும் அதை பதிப்பித்து வெளியிட முடியுமா என்ற விண்ணப்பத்திற்கு மனமுவ ந்து வெளியிடுவோம் என்று என்னை ஊக்குவித்து முகநூல் வழி என்னை இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டியது தகிதா...தகிதாதான். அப்பொழுது என்னுடன் கைகோர்த்து பயணித்த என் ‘கவிதைச்’ சகோதரன் பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள் என் எழுத்துக்களை அங்கீகரித்து என்னைப் படித்து ஊக்குவித்து என்னை எழுத்துத்துறைக்குள் ஐக்கியமடையச் செய்தார்.


08 . கவிதை பற்றி யாது கருதுகிறீர்கள்?

கவிதையென்பது காலத்தின் கணிதம். கவிதைக்குள்
பொதிந்துள்ள கருத்து பயண்பாடாய் காலத்தைக் கட ந்து வென்றிடுதல் நன்று.


09 . படிமங்களையும் குறியீடுகளையும் உங்களால் எவ்வாறு மிக இலாவகமாக கையாள முடிகிறது?

நிச்சயமாக உண்மையைச் சொல்கிறேன். படிமங்களையும் குறியீடுகளையும் நான் கையாளுவதில்லை. அவைகள் தான் என்னை கையாளுகின்றன. ஏனென்றால் அவைகளைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. எனக்குள் உள்ள அந்த உந்து சக்தி கவிதையாய்ப் பிரசவிக்கின்றது படிமங்களில் தவழ்கின்றது.


10 . புலம்பெயர் கவிஞர்களில் 2000 ற்குப் பின்னர் யார் யாரைக் குறிப்பிட்டுக் கூறுவீர்கள்?

வருடங்களைப் பற்றி சரியாகத் தெரியாது. புலம் பெயர் எழுத்தாளர்கள் வரிசையில் நான் வியந்த மனிதர்களில் நண்பர் கங்கை மகனும் தோழி சிவ மேனகையும். இவர்களது தெளிந்த சமுதாய சிந்தனை என்னை மிகவும் கவர்ந்தது. கவிஞர்கள் கோபிநாத், நடா சிவா, ராஜேந்திரகுமார் மற்றும் ஈழவாணி இவர்களது கவிதைகள் படித்திருக்கிறேன், குறிப்பிடத்தக்கவர்கள்.


11 . எமது படைப்பாளிகள் மற்றும் படைப்புக்களின் நிலை எவ்வாறு உள்ளது?

அவ்வப்பொழுது தங்கள் படைப்பாளிகளின் படைப்புக்களை வாசித்துள்ளேன். திருப்திகரமாய் உள்ளது. சகோதரி தங்களின் படைப்புக்களைக் குறித்து என்னால் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. தங்களின் எழுத்துக்களில் இழையோடிடும் வேகம், விவேகம், அழுத்தமான கருத்துக் குவியல், சமூகநலச் சிந்தனை என்னை மிகவும் வெகுவாகவே கவர்ந்துள்ளது.


12 . தாடாகம் கலை இலக்கிய வட்டம் பற்றி உங்கள் கருத்து ?

ஒரு பொதுவான சிந்தனையுடன், சமுக அவலங்களுக்கு,
புறக்கணிப்புகளுக்கு எதிராய் இலக்கியச் சிந்தனையுடன் ஆக்கப் பூர்வமாய் குரல் எழுப்பும் அமைப்பாகவே கருதுகிறேன்.


13 . தற்போது வெளி வந்து கொண்டிருக்கும் ஈழத்து பத்திரிகைகளின் பங்களிப்புக் குறித்து ஏதாவது கூற முடியுமா ?

மண்ணிக்கவும். நான் படித்ததில்லை. அதனால் கருத்துக் கூற இயலவில்லை.


14 . இணையத்தள சஞ்சிகைகளின் வரவும், அதில் பங்களிப்புச் செய்யும் வாசகப் பரப்பும் தற்போது அதிகரித்துள்ளது. இது குறித்து தாங்கள் கருதுவது யாது ?

இந்த பங்களிப்பு நல்ல விஷயங்களுக்குப் பயண்படுமெனில் வரவேற்கத்தக்கதுதான். மாறாக தவறான பாதையில் சென்று விடக்கூடாது.


15 . பின் நவீனத்துவம் எங்கள் சூழலில் எங்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூற ஏற்றதொரு கோட்பாடாக உள்ளது என்று கருதுகிறீர்கள்?

நிச்சயமாய். அதில் என்ன சந்தேகம்.


16 . இன்றைய நவீன பெண் எழுத்தில் உங்களை கவர்ந்த எழுத்தக்கள் பற்றி சொல்லுங்கள்?

சகோதரி, தாங்கள், சிவ மேனகை, சுவேதா கிஸ்னா, பாமினி, தனலட்சுமி பாஸ்கரன், ஈழவாணி, ஜோஸபின்பாபா. இன்னும் எத்தனையோ பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய படைப்புக்களை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்காததால் குறிப்பிட முடியவில்லை.



17 . இன்றைய சூழல் ஏதாவது எழுதத்துண்டியிருக்கிறதா?

பெரும்பாண்மையும் இன்றைய சூழலில் பாதித்த விஷயங்கள் குறித்தே எழுதுகிறேன்.

18 . உங்கள் எழுத்தை செம்மைப்படுத்த அல்லது எழுத்துப்பரப்பை விரிக்க என்ன செய்கிறீர்கள்?

கற்றது கடுகினும் சிறிது. நிறைய அரிய விஷயங்கள் இலக்கியத்தில் படிக்க வேண்டியிருக்கிறது. முழுமையான உணர்தல், உணர்ந்ததைப் புரிதல், புரிந்ததை அறிதல். அந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்.


19 . யாருடைய கவிதைகளை (எழுத்துக்களை )அதிகம் வாசிப்பீர்கள் ?

கவிஞர்கள் பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன்,வாலி, மேத்தா, கவிக்கோ அப்துல் ரஹ்மான், வைரமுத்து ஆகியோரது கவிதைகளை விரும்மிப் படித்துள்ளேன். சாண்டில்யன், கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி, மு.வரதராஜன். இவர்களது எழுத்துக்கள் என்னை மிகவும் பாதித்துள்ளது. யவன ராணியை மூன்று தடவைக்கு மேல் முழுமையாக படித்திருக்கிறேன். கடைசியாகப் படித்தது நாண்கு வருடங்களுக்கு முன்பு. யவண ராணியை நினைக்கும் பொழுதெல்லாம் அவளின் அறிவுக் கூற்மை, அழகு, சாதுர்த்தியம், தன்னலமற்ற பான்பு, தியாகம் என் மனதை நெகிழவைக்கும்.
பாவை விளக்கு திரும்பத் திரும்ப படித்திருக்கிறேன். இன்னும் அந்த கதாபாத்திரங்களைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
குறிஞ்சி மலர், அகல் விளக்கு, கரித்துண்டு மறக்க முடியாத புனிதங்கள்.

20 .  உங்களது இலட்சியம் எதிர்பார்ப்பு என்ன ?

இலக்கியம் வழி இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய
முடிந்தால் திருப்தி. எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை. எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையே கொடுக்கும்.


21 . உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் பரிசுகள் பற்றி ?

பாராட்டும் பரிசும் கிடைத்தால் சந்தோசம். கிடைக்கதெனில் வருத்தம் இல்லை.


22 . வளரத் துடிக்கும் இளையவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் ?

நானும் வளர்ந்து கொண்டிருப்பவன்தான். எனக்கு சொல்லிக் கொள்வதையே நான் சொல்கிறேன். தன்னை அறிந்து, உறவுகளை, மனிதர்களை, சமுதாயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளத் தலைப்படுதல் ஒரு ஆக்கப்பூர்வமான விடிதலுக்கு வித்திடும்.

23 . இறுதியாக உங்களுடன் தொடர்பு கொள்ளவது (கலையுள்ளங்க
ள்)எவ்வாறு ?


மு. ஆ. பீர்ஒலி,
முதன்மை வர்த்தக ஆய்வாளர்
தெற்கு தொடர்வண்டித் துறை,
மதுரை மண்டலம்
23, ராஜேந்திரா, 3வது தெரு,
கரிமேடு, மதுரை-16.

அலை பேசி – 94422 91093

மின் அஞ்சல் – peeroli1955@gmail.com

இணையதளம்- thevisionbypeeroli.blogspot.com

நித்திரைப் பயணங்கள் கவிதை நூலை இணையத்தில் தரவிறக்கம் செய்வதற்கு இந்த இணையத்தைப் பயண்படுத்தவும்.....

M. A.pdf download - 2shared
www.2shared.com
M. A.pdf download at 2shared.document M. A.pdf download at www.2share.com.


நன்றி சகோதரனே நன்றி

வியாழன், 4 ஏப்ரல், 2013

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால் சர்வதேச மட்டத்தில் நடாத்திய கவிதைப் போட்டியில் தொகுதிக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை தடாகம் குடும்பத்தினரின் நல் வாழ்த்துக்கள்


ஒற்றுமை வெள்ளியே....!
(இத்ரீஸ் யாக்கூப் )

ஒற்றுமை வெள்ளியே
எங்கள் வானிலே
என்று நீ முளைப்பாய்?
வேறுபாட்டுத் திரைகளை
எங்கள் விழிகளில்
என்றுதான் அகற்றுவாய்?
மக்கள் மாளிகையில்
சரித்திரமாக வீசி வந்த
சமாதானக் கொடியிங்கே
நரித்தனக் கத்திரிகளால்
நறுக்கப்பட்டு நச்சு நிறங்கள் பூசி
கட்சிகளின் பெயரால்
கம்பங்களில் கட்டி
காசாக்கப் படுகிறதே...!
சமுத்திரத்தில் சுவர்கள் எழுப்பி
சூறையாட நினைப்பதெல்லாம்
சுகபோகக்காரர்களின் சந்தர்ப்ப சூழ்ச்சியே
அதை அறியாது அன்பானவர்களை
அந்நியர்களாக்கிப் பார்ப்பது
மனிதநேயத்தின் வீழ்ச்சியே!
கண்கெட்டக் கூட்டத்தினருக்கு
பண்பாட்டு வைத்தியம் தேவை
புறமெங்கும் பரவி வரும்
பிரிவினைஇருள் விலக
புரிதலின் திரிகளை ஏற்றுவதே
இன்றைய நம் முக்கிய சேவை...!
ஆம் அன்பானவர்களே..!
வாருங்கள் ஒன்றுபடுவோம்!
சகமனிதரை நேசிப்போம்
அகத்தின் ஒளியில்
வாழும் யுகங்களை அர்த்தமாக்குவோம்

அமைப்பாளர் அனுமதியோடு
ரமலான் தீன்
தகவல் பிரிவு
தடகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி அமைப்பு