புதன், 15 மே, 2013

தடாகம் கலை இலக்கிய கல்வி ,கலை, கலாச்சார ,சமூக அபிவிருத்தி ,சர்வதேச அமைப்பின் அறிமுகம்

 வெலிகம ரிம்ஸா முஹம்மத்




















வாழ்க்கைக் குறிப்பு

தென் மாகாணம், மாத்தறை மாவட்டம்,வெலிகம தேர்தல் தொகுதியைச் சேர்ந்த கவிதாயினி வெலிகம ரிம்ஸா அவர்கள் முஹம்மத் - லரீபா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார்.

வெலிகம அறபா தேசிய பாடசாலை மற்றும் வரக்காப்பொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியாவார். கணக்கீட்டுத் துறையில் MAAT, MIAB ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர், தனியார் நிறுவனத்தில் உதவிக் கணக்காளராக கடமையாற்றி வருகிறார்.


இலக்கிய ஈடுபாடு

இவர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் என்ற சொந்தப் பெயரிலும், வெலிகம கவிக்குயில், வெலிகம நிலாக்குயில் என்ற புனைப்பெயர்களிலும் எழுதி வருவதுண்டு. 2004இல் தினமுரசு பத்திரிகையில் 'நிர்மூலம்'என்ற கவிதையை எழுதியதையடுத்து இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 50க்கும் மேற்பட்ட நூல் விமர்சனங்களையும் எழுதியுள்ளார்.

இதழியல் துறை

தற்போது பூங்காவனம் இலக்கிய வட்டம் என்ற இலக்கிய அமைப்பின் தலைவராகவும் பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் சேவையாற்றி வருகிறார்.





ஊடகத்துறை

• 1997 - 1998 ஆம் ஆண்டுகளில் சூரியன் எப்.எம் அலைவரிசையில் இவரது ஏராளமான கவிதைகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.

• சுமார் ஒன்றரை வருட காலங்களாக (2004 - 2005) இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியில் பிரதிகள் தயாரித்தும், நேரடியாக குரல் கொடுத்துமுள்ளார்.

• 2008 டிசம்பர் 09 இல் நேத்ரா அலைவரிசையில் ஹஜ் பெருநாள் கவியரங்கத்தில் கவிதை கூறியிருக்கிறார்.

• 2009 ஜூன் 29 இல் நேத்ரா அலைவரிசையில் முஸ்லிம் நிகழ்ச்சியில் கவிதை கூறியிருக்கிறார்.

• 2011 பெப்ரவரி 13 இல் கவிஞர் திரு. சடாகோபன் அவர்களின் தலைமையில் சக்தி எப்.எம். அலைவரிசையில் கவிராத்திரி நிகழ்ச்சியில் கவிதை கூறியிருக்கிறார்.

இதுவரை வெளியிடப்பட்ட நூல் வெளியீடுகள்

01. வங்கிக் கணக்கிணக்கக் கூற்று (கணக்கீடு) 2004 - சுஹா பப்ளிகேஷன்

02. கணக்கீட்டுச் சுருக்கம் (கணக்கீடு) 2008 - காயத்திரி பப்ளிகேஷன்

03. கணக்கீட்டின் தெளிவு (கணக்கீடு) 2009 - இஸ்லாமிக் புக் ஹவுஸ்

04. தென்றலின் வேகம் (கவிதை) 2010 - முற்போக்கு கலை இலக்கிய மன்றம்

05. ஆடம்பரக் கூடு (சிறுவர் கதை) 2012 - ரூம் டு ரீட்

06. என்ன கொடுப்போம்? (சிறுவர் கதை) 2012 - ரூம் டு ரீட்

07. பாடல் கேட்ட குமார் (சிறுவர் கதை) 2013 - ரூம் டு ரீட்

08. கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை (விமர்சனம்) 2013 - கொடகே வெளியீடு


வெளிவர இருக்கும் நூல்கள்

01. எரிந்த சிறகுகள் (கவிதை)

02. வண்ணாத்திப் பூச்சி (சிறுவர் பாடல்)




கவிதைகளின் பாடு பொருள்கள்

காதல், பெண்ணியம், சமூக அவலம், சீதனக் கொடுமை, போர்ச்சூழல், மானிட நேயம் என்பன இவரது பாடு பொருள்களாக காணப்படுகின்றன.



இவர் பற்றிய குறிப்புக்கள்

• செந்தூரம் - 2004ம் ஜூலை 04

• 2007 பெப்ரவரியில் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்கள் வெளியிட்ட இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 07ல் 175 ஆவது நபராக இவரைப்பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

• ஞானம் - 2007 ஜூன் இதழ்

• சுடர் ஒளி பத்திரிகையின் 'உணர்வுகள்' பகுதி - 2008 பெப்ரவரி 3 - 9

• செங்கதிர் - 2008 ஜூலை இதழ்

• நவமணி பத்திரிகையில் வெளியான 'இலங்கை திசை பரத்தி - 2008 ஜூலை 20

• மித்திரன் கலாவானம் - 2009 நவம்பர் 08 (அமரர் ஸ்ரீதர் பிச்சையப்பா)

• மித்திரன் கலாவானம் - 2010 ஏப்ரல் 18 (க. கோகிலவாணி)

• தினகரன் கதம்பம் - 2011 ஜனவரி 23

• கவிஞன் சஞ்சிகையின் அட்டைப்படத்தில் இவரது புகைப்படத்தை பிரசுரித்து இவர் பற்றிய தகவல்களை வெளியிட்டு கௌரவித்திருந்தது - 2012 ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான இதழ்

• முத்துக்கமலம் இணையத்தளம்

• விக்கிப்பீடியா வலைத்தளம்

• காற்றுவெளி இணைய இதழ்



இவரது படைப்புக்கள் இடம்பெற்றுள்ள பிற நூல்கள்

• இந்தியாவில் வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்காலுக்குப் பின் என்ற கவிதைத் தொகுப்பில் இவரது கவிதை இடம் பெற்றுள்ளது.

• 2011 ஜூன் மாதம் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் அமைப்பினால் வெளியிடப்பட்ட உன்னை நினைப்பதற்கு என்ற கவிதைத் தொகுப்பில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.



நேர்காணல்கள்

• மித்திரன் வாரமலர் - 2009 நவம்பர் 22

• நேத்ரா அலைவரிசை உதய தரிசனம் சிறப்பு அதிதி நேர்காணல் - 2010 ஜனவரி 20

• எங்கள் தேசம் - 2010 ஆகஸ்ட் 01 - 14

• தினகரன் வாரமஞ்சரி செந்தூரம் இதழின் அட்டைப்படத்தில் இவரது புகைப்படத்தை பிரசுரித்து நேர்காணல் செய்து கௌரவித்திருந்தது - 2011 மார்ச் 13

• டேன் அலைவரிசை இன்றைய பிரமுகர் சிறப்பதிதி நேர்காணல் - 2011 மார்ச் 23

• தினமகுடி சஞ்சிகையில் இவரது புகைப்படத்தை பிரசுரித்து நேர்காணல் செய்து கௌரவித்திருந்தது. – 2013 மார்ச் இதழ்



விருதுகள், பரிசுகள்

• 2007 இல் அகில இன நல்லுறவு ஒன்றியம் இவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி 'சாமஸ்ரீ கலாபதி' என்றபட்டத்தை கொடுத்து கௌரவித்துள்ளது.

• 2008 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தினால் நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

• 2011 இல் அல்ஹஸனாத் சஞ்சிகை நாடளாவிய ரீதியில் நடாத்திய பேனாக்கள் பேசட்டும் என்ற கவிதைப் போட்டியில்பாராட்டுப் பத்திரம் பெற்றுள்ளார்.

• 2012 இல் கொழுந்து சஞ்சிகையினால் சர்வதேச மகளிர் தின விழாவில் இதழியல் துறையில் ஆற்றிவரும் பணிக்காக இவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி சாதனைக்குரிய மகளிர் விருது பட்டத்தை கொடுத்து கௌரவித்துள்ளது.



இவரது ஆக்கங்கள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள்

• வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன்,மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நவமணி,விடிவெள்ளி, எங்கள் தேசம்,இருக்கிறம்,வேகம், ஜனனி போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகள்.

• ஓசை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர்,படிகள், அல்லஜ்னா, அல் ஹஸனாத், அஸ்ஸகீனாஹ், தூது, ஞானம், நீங்களும்எழுதலாம், மல்லிகை, பேனா, மொழி மற்றும் இந்திய இதழான இனிய நந்தவனம் போன்ற சஞ்சிகைகள்.

• வார்ப்பு, முத்துக்கமலம், கீற்று, தமிழ் ஆதர்ஸ், பதிவுகள், ஊடறு, திண்ணை, தேனீ ஆகிய இணையத்தளங்கள்.



அங்கத்துவம் வகிக்கும் இலக்கிய அமைப்புகள்

• ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி

• இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்



இவரது வலைப்பூக்கள்

• www.rimzapoems.blogspot.com

• www.rimzavimarsanam.blogspot.com

• www.rimzapublication.blogspot.com

www.rimzachildrenstory.blogspot.com




தொடர்புகளுக்கு

Mobile - 077 5009222

E-mail - poetrimza@gmail.com



வெலிகம ரிம்ஸா முஹம்மத் கவிதை


முரண்பாடுகள்!



நீ கடலில் முத்தெடுக்க

ஆசைப்படுகிறாய் - ஆனால்

மூச்சடக்க அச்சப்படுகிறாய்!



வெற்றிக் கம்பத்தைத் தொட

நினைக்கிறாய் - ஆனால்

தோல்விகளைத்

தாண்ட மறுக்கிறாய்!



உயரப் பறக்க கனவு

காண்கிறாய் - ஆனால்

இருந்த இடத்திலேயே

இருந்துகொள்கிறாய்!



வெளிச்சத்தை தேட

நினைக்கிறாய் - ஆனால்

இருளைக் கண்டு

அச்சப்படுகிறாய்!



பூப் பாதைகள்

வேண்டும் என்கிறாய் - ஆனால்

கற்களையும் முற்களையும்

கடக்க மறுக்கிறாய்!



இஷ்டம் போல வாழ

ஆசைகொள்கிறாய் - ஆனால்

கஷ்டப்பட்டு உழைக்க

மறுத்துவிடுகிறாய்!



தொழிலதிபராக

கனவு காண்கிறாய்

சிறிய நட்டங்களை

தாங்க பயப்படுகிறாய்!



அதிகாரம் பண்ண

ஆசைப்படுகிறாய் - ஆனால்

கட்டளைகளுக்கு அடிபணிய

மறுக்கிறாய

நன்றி -



கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக