இந்தியாவின் பிரபல கவிஞர் முத்து பாலகன் அவர்களுடன் நேர்காணல்
பேட்டி :- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
( அமைப்பாளர் தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு )
வினா :- தங்களின் முதல் கவிதை எது? எந்த இதழில் வெளி வந்தது?
அப்பொழுது தங்களுக்கிருந்த மனநிலை எப்படியிருந்தது?
விடை :- முதல் இரு கவிதைகள் இவை தான். முகநூலில் தான் வெளியிட்டேன்.
பின்பு எனது முதல் கவிதைத் தொகுப்புப் புத்தகத்தில் வெளிவந்துள்ளது.
உறங்க முடியவில்லை
அரங்க நாடகத்தின்
சிறந்த பாத்திரம் நான்...!
வரம் வந்தாலும் வாடும்
சுகம் கொண்டாடும் சாபம்
சதி வந்தாடும் நேரம்
விதி என்றான பாரம்
சவம் போல் ஆன யோகம்
அவம் சுட்டாடும் பாவம்
சுரம் நில்லாத ராகம்
தரம் அல்லாத தாளம்
குணம் கெட்டாடும் காலம்
அகம் தள்ளாடும் நாளும்
பலன் இல்லாத தாயம்
இதம் எந்நாளும் மாயும்
வலி நன்றாக வாழும்
மனம் கொள்ளாத போதும்
உளம் மெல்லாத ஓலம்
எது வந்தாலே தீரும்
தினம் மன்றாடி ஓயும்
இது பொல்லாத சோகம்
நிதம் பட்டாடும் சீலம்
உயிர் விட்டாலும் போதும்
உடன் விட்டோடும் யாவும்!
இதயத்தில் வரும் மாற்றம்
அது காதலா ...?
இருவர்க்கும் ஏற்பட்ட
பரிமாற்றமா ...?
உணர்வுக்குள் உயிரோட்டம்
எனதாகுமா ...?
கனவுக்குள் கடை போடும்
களவாகுமா ...?
நினைவுக்குள் நடமாடும்
நிசமாகுமா ...?
இரவுக்கும் பகலுக்கும்
நிறம் மாறுமா ...?
இனிமைக்கும் இதன் மேலே
பெரும் மோகமா ...?
தனிமைக்குள் நிறை தேடும்
தவமாகுமா ...?
வலிமைக்கு விளைவாகும்
வளமாகுமா ...?
சிறையிற்குள் சிலிர்த்தெழுந்த
சிறகாகுமா ...?
கருவுக்குள் உருவாகும்
விஞ்ஞானமா ...?
எழில் காண முடியாத
தவிப்பகுமா ...?
மௌனத்தை மொழியாக
வரவேற்குமா ...?
விரதத்தில் தலையான
மதமாகுமா ...?
ஆம் காதல்...
மனதுக்குள் மனம் போகும்
இனம் தானம்மா ...!
மானுடத்தில் உயர்வான
நிலைதானம்மா ...!
அறம் விளைக்கும் அன்புக்கு
அடிநாதமே ...!
அருளுக்கும் பொருள் தந்த
திருவாகுமே ...!
இறைநிலையும் இதனுள்ளே
இருப்பகுமே ...!
அன்னைக்கும் அன்னை இது
அதுபோதுமே ...!
வாழ்க்கை என்னை விட்டு வெளியேறிய பொழுது, அதன் வேதனையில் துடித்துத் தவித்த போது எழுதினேன், என் வலிகளைப் பொருக்க முடியாமல் வாரிக் கொட்டியது .
காதல் என்னை விட்டு விலகிய போது ,காதலால் துடித்துத் துவண்ட போது ,காதலை பற்றிய ஒரு தேடல், காதலைப் பற்றிய ஒரு ஏக்கம், காதலைப் படிக்கும் தாக்கம், காதல் என்றால் என்ன என்ற கேள்வி துளைத்தது ? என்னுள் மலர்ந்தது
இரண்டும் ஒரே நேரத்தில் எழுதியதே உணர்வும் வலியும் ஒன்றே ஆனால் விடை இரண்டு
வினா :- ஒரு நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள் ?
விடை :- ஈர்க்க வேண்டும் எல்லோரையும் அது தான் நல்ல கவிதை.
பாமரனும் பல தடவை உள்ளுணர்வோடு முனுமுனுக்க வைப்பது தான் ஒரு நல்ல கவிதை.
வினா :- உங்கள் படைப்புகளுக்காக ஒவ்வொரு நாளையும் எப்படித் திட்டமிடுகிறீர்கள் ?
விடை :- தனியாகத் திட்டமிடுவது யில்லை. ஒரு மின்னல் கீற்று போல வரும். எப்பொது என்று சொல்ல முடியாது. வந்தால் வந்து கொண்டே இருக்கும் தடுக்க முடியாது. கவிதையை முடித்து வைக்க அப்போது மிகவும் சிரமமாகவே இருக்கும். பிடித்து வைக்க வேண்டும் இல்லையேல் மறைந்துவிடும். நான் எழுதியதை விட என்னுள் தோன்றி மறைந்தவையே அதிகம்.
காரணம் சில நிமிடங்களுக்குள் பல வரிகள் வந்துவிடும். எழுதுவது கடினமாகவே இருக்கும். அவ்வளவு வேகமாகவே வரும். இது அடிக்கடி நிகழ்வது தான். எதோ என்னிடம் உள்ள ஒரு குறை தான் இது, தோன்றுவதை நினைவில் வைக்க இயலவில்லை.
வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் கவிதை தான். சுகம், துக்கம், கவலை, அமைதி, வெற்றி, தோல்வி, அவமானம், பெருமை, ஆசை, கனவு, காதல், தேடல் இப்படி எல்லாமே கவிதை தான்.
அனுபவங்களை ஆசைகளை வைத்துப் பிறக்கும் என் கவிதை.
வினா :- கவிதையின் வடிவம் உள்ளடக்கம் எல்லாம் மாறிக் கொண்டேயிருக்கிறது. எதிர்காலக் கவிதை எப்படி இருக்கும். இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
விடை :- கால மாற்றங்களுக்கு ஏற்ப எவ்வடிவம் ரசிப்பவர்களை ஈர்க்குமோ அவையே எதிர்காலத்தில் கவி வடிவமாக நிலைக்கும். எளிமையாக இலகுவாக சொல்லப்படுங் கவிதை எக்காலத்திலும் நிலைக்கும்.
மரபுக் கவிதைகளும் எளிமையாக இலகுவாக இருப்பின் எக்காலத்திலும் நிலைக்கும்.
வினா :- இலக்கிய உலகுக்கு உங்களது பங்களிப்பு குறித்து கூறுங்கள்?
விடை :- ஒன்றுமே இல்லை.
உளறிக் கொண்டிருக்கின்றேன் ஏதோ என் வலிகளை.
இலக்கிய உலகு எங்கு…? நான் எங்கு…?
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்… என்னைப் பற்றி
ஒப்புக்குச் செய்த செப்புக் காசு யாம்
தப்புக்குள் தெளிந்த தர்க்க வாதந் தான்
வித்துக்குள் உழலும் உத்வேகம் யாம்
மொத்தத்தில் குழையும் அன்பு பாலகன் தான்
ஏடெடுத்துப் படிக்காத ஏகலைவன் இல்லை நான்
கூடறுக்குங் கூடாதக் குறிப்புகளை கொட்டுகின்றேன்
தேடலுக்குல் ஈடில்லா திகழ்வதாகு மிலக்கியமாய்ப்
பாடலுக்கு என்செய்வேன் படித்ததில்லை தமிழ் மொழியை…
வினா :- ழுத்துத்துறைக்குள் நீங்கள் வந்தது பற்றிக் கூறுங்கள்?
விடை :- வாழ்க்கையில் நான் வாங்கிய அடிகள் ஏமாற்றங்கள் வாழ்வா சாவா என்று தள்ளாட வைத்த சமயத்தில் தமிழ் என் வலிகளை, வேதனைகளை வடித்து வைத்தது; முகநூல் மூலமாக. தீய பழக்கங்கள் ஏதுமில்லாத்ததால் ஒரு மாற்றத்திற்காகத் தவித்த என்னைத் தாங்கியது தமிழ், தாலாட்டியது தமிழ். ஏன் முடிந்த வாழ்வை புதுப்பித்தது தமிழ், வாழ வேண்டாம் விடை பெறுவோம் என்ற என் முடிவை மாற்றியது தமிழ். உடன் ஊக்குவித்து வாழவைத்தவர் முகநூல் மூலமாக உடன் பிறவா சகோதரர் அண்ணன் திரு லோகநாதன் பொன்னுசாமி … கொழும்பு, இலங்கை.
தமிழ் எழுதவே தெரியாது. சொற்பிழைகள் அதிகமிருக்கும். ஆனாலும் தளரவில்லை. முகநூல் மூலமாக உடன் பிறவா சகோதரர் அண்ணன் திரு இரா தியாகராசன் புதுச்சேரி அவர்களின் உறுதுணையும், வழிகாட்டலும் இந்த மக்கு மண்டையைத் ஓரளவே தேற்றியது.
வினா :- கவிதை பற்றி யாது கருதுகிறீர்கள்?

விடை :- சொல்வது கவிதை
சுவை படச் சொல்வது அருமை
எளிமையா யிருப்பது வளமை
இதயந் தொடுவது முழுமை
வினா :- புலம்பெயர் கவிஞர்களில் 2000 ற்குப் பின்னர் யார் யாரைக் குறிப்பிட்டுக் கூறுவீர்கள்?
விடை :- அந்த அளவிற்கு விவரங்கள் தெரியாது. பலர் பற்றிய அறிமுகமே என்னக்குள் இல்லை. காரணம் நான் எழுதத் துவங்கியதே 2010க்குப் பிறகுதான்
வினா :- எமது படைப்பாளிகள் மற்றும் படைப்புக்களின் நிலை எவ்வாறு உள்ளது?
விடை :- பல படைப்பாளிகள் மெய் சிலிர்க்க வைக்கின்றனர். ஆனால் சகோதரர் கவியன்பன் கலாம் அவர்களின் மரபு வடிவம் என்னைச் சொக்க வைக்கும் பல நாள்.
வினா :- தாடாகம் கலை இலக்கிய வட்டம் பற்றி உங்கள் கருத்து ?
விடை :- நல்ல தொரு முயற்சி தமிழ் வளர்க்க
வினா :- தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஈழத்துபத்திரிகைகளின் பங்களிப்புக் குறித்து ஏதாவது கூற முடியுமா ?
விடை :- ஈழப் பத்திரிகைகள் பற்றி ஒரு விவரமுந் தெரியாது.
வினா :- இணையத்தள சஞ்சிகைகளின் வரவும், அதில் பங்களிப்புச் செய்யும் வாசகப் பரப்பும் தற்போது அதிகரித்துள்ளது. இது குறித்து தாங்கள் கருதுவது யாது ?
நல்ல வளர்ச்சி. சுய ஒழுக்கம் கெடாத வரையில், ஆரோக்கியமான தனி மனிதக் காழ்புணர்ச்சி இல்லாத வரையில்.
பின்நவீனத்துவம் எங்கள் சூழலில் எங்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூ ற ஏற்றதொரு கோட்பாடாக உள்ளது என்று கருதுகிறீர்கள்?
கோட்பாடு என்பதை விட வழி வகுத்திருக்கின்றது எனலாம்
இதில் “எங்கள்” என்பது யாரைக் குறித்து சொல்லி யிருக்கின்றீர்கள் என்றறியவில்லை.
பொதுவாக எல்லோருக்கும் உள்ளதைச் சொன்னேன்.
நவீனத்துவம் என்பது தொடர்பு எல்லைகளை உடைத்துள்ளது, உலகத்தை ஒரு கைப் பிடிக்குள் கொண்டு வந்துள்ளது. மற்றபடி அறிவின் வளர்ச்சியில் முதிர்ச்சி யில்லை, ஒரு அளவற்ற வளர்ச்சி சமச்சீராக இல்லாமல் போவது நோய் தானே. நவீனத்துவமும் இன்று ஒரு சமச்சீரில்லாத வளர்ச்சியைத் தான் கொண்டுள்ளது.
உம்:- நவீன அறிவியல் உலகம் இன்னுங் கண்டுபிக்கத் தடுமாறும் கட்டுப் படுத்தப்பட்ட சம சீதோசன அணுச்சிதைவை CONTROLED COLD FUSION AND CONTINUES SELF RADIO ACTIVE MUTATION அநாயசமாக ரச வாதம் என்று (ரச சஞ்சாரம் என்பது RADIO ACTIVE WAVES) செய்து காண்பித்தது உலகத்திலேயே நம் தமிழ் நாட்டில் தான். பாதரசத்திற்கும் தங்கத்திற்கும் அணு அடுக்கு வரிசை அமைப்பில் ஒரே ஒரு ELECTRON அதிகமிருப்பதையும் அதை கட்டுப் படுத்தப்பட்ட சம சீதோசன அணுச்சிதைவினால் நீக்கி பாதரசத்தைத் {Number of Protons/Electrons: 80} தங்கமாக {Number of Protons/Electrons: 79} மாற்றும் வித்தையைக் கண்டுபிடித்து செய்து காண்பித்தவர்கள் நம் சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்.
நவீனம் இன்னும் முறையாக வளரவேயில்லை. அதற்குப் பணம் வியாபாரம் என்ற நோக்கம் முதன்மையாகிப் போனதால் சமச்சீரான வளர்ச்சி யடையவில்லை
வினா :- இன்றைய நவீன பெண் எழுத்தில் உங்களை கவர்ந்த எழுத்தக்கள் பற்றி சொல்லுங்கள்?

விடை :- சகோதரி பிரேமலதா மற்றும் சகோதரி தமிழ்ச் சொல்வி நிக்கோலஸ் அவர்களின் கவிதைகள் எம்மைக் கவர்ந்தவை.
வினா :- இன்றைய சூழல் ஏதாவது எழுதத்துண்டியிருக்கிறதா?
விடை :- நிறைய எழுதியும் இருக்கின்றேன் .
வினா :- உங்கள் எழுத்தை செம்மைப்படுத்த அல்லது எழுத்துப்பரப்பை விரிக்க என்ன செய்கிறீர்கள்?
விடை :- சுய பரிசோதனை…
என்னை,…. என் எழுத்துக்களை
வினா :- எழுதத்தொடங்கிய சூழல் பற்றியும் எழுதி வருகிற சூழல் பற்றியும் சொல்லுங்கள்.
விடை :- எழுதத் துவங்கியது வலியிலிருந்து விடுதலை பெற… இப்போது என் இலக்கு நோக்கிய பயணமாக மாறியுள்ளது. சூழல் மாறாமலே அப்படியே தான் உள்ளது.
வினா :- யாருடைய கவிதைகளை (எழுத்துக்களை ) அதிகம் வாசிப்பீர்கள்?
விடை :- கவிதை கண்ணதாசன், வாலி பெரும்பாலும் இவர்களுடையது தான்.
பாவினத்தில் மிகவும் பிடித்தது அருணகிரியார் தமிழ் நடை.
எழுத்துக்களில்… சாண்டில்யனின் காதலன் நான்
வினா :- உங்களது இலட்சியம் எதிர்பார்ப்பு என்ன ?
விடை :- இல்லாதவருக்கு இலவசக் கல்வி அவர் விரும்பும் வரை…
தமிழின் பெருமை அறிய அறிய இன்று வரை எல்லோரும் தமிழின் பன் முகங்களில் கலை இலக்கியம் என்ற முகம் மட்டும் புதுப்பித்து வைத்துள்ளனர். அதன் அறிவியல், வேதியியல், தொழில் நுட்பம், மருத்துவம் போன்ற அதிசயத் தக்க முகங்கள் தொலைக்கப் பட்டது அறிந்து மிகவும் வேதனை. இதை ஆரம்பித்து வைத்து விட்டாவது என் உயிர் பிரிய வேண்டும் என்ற இலக்கு உள்ளது.
வினா :- உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் பரிசுகள் பற்றி ?
பரிசு - முகநூல் நட்புகளின் அன்பு,
பாராட்டுக்கள் - முகநூல் மூலம் சொந்தகளான உடன் பிறவா உறவுகள். அதிலும் பாசம் மிகு தமக்கையார்கள் தான் அறுதிப் பெரும்பான்மை,
வினா :- நவீன இலக்கியக் கொள்கைகளை நீங்கள் விரும்புகின்றீர்களா ?
விடை :- நவீன இல்லக்கியங்களுக்கு கொள்கை எங்கு இருக்கின்றது.
கொள்கையே இல்லாதது தான் இன்றைய நவீன இலக்கியங்கள்
கொள்கை யென்றால் ஓர் இலக்கு இருக்க வேண்டும், அதை அடைய சில கட்டுப்பாடுகள் சுயமாக வரவேண்டும்.
நவீன இலக்கியங்களுக்கு அப்படி ஒரு கொள்கை இருக்கின்றதா…? எமக்குத் தெரிந்தவரை இல்லை
வினா :- வளரத் துடிக்கும் இளையவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் ?
விடை :- அன்பும் அறமும் தொலைக்க வேண்டாம்… எக்கணமும், எக்காலத்திலும், எச்சூழலிலும்.
முன்னெற்றத்திற்கு அறிவு உதவலாம். ஆனால் அதை நிலை நிறுத்திவைக்க, ஒரு சரிவு வரும் போது தாங்கி நிற்க, மீண்டும் முயன்று வெற்றி பெற அன்பும் அறமும் கண்டிப்பாக வேண்டும்.
மிக்க நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக